36 ரபேல் விமானத்தின் விலை ஜாஸ்தி.. எச்சரித்த அதிகாரி.. புறக்கணித்த பாதுகாப்புத்துறை!
Recommended Video
டெல்லி: ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் இருந்த மனோகர் பாரிக்கர் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சருக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ரபேல் விமானத்தின் விலை குறித்த ஆட்சேபனையை மூத்த பாதுகாப்புத்துறை எழுப்பியிருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதுதொடர்பான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரி பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் கொள்முதல் மேலாளர் பொறுப்பில் இருந்தவர் ஆவார். இவர் தனது ஆட்சேபனையை எழுத்துப் பூர்வமாக துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவில் இவரும் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.
இவர் ஆட்சேபனை எழுப்பியதால் அமைச்சரவை குழுவால் இந்த ஒப்பந்தத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர முடியாமல் போயுள்ளது. அதேசமயம், இவருக்கு மேல் உள்ள இன்னொரு அதிகாரி, இதை பொருட்படுத்த்த தேவையில்லை என்று கூறியதால், இவரது ஆட்சேபனையை புறம் தள்ளி விட்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் தெரிவிக்க கேபினட் கமிட்டி முடிவு செய்துள்ளது.
தற்போது அந்த மூத்த அதிகாரி தெரிவித்த ஆட்சேபனைக் குறிப்பானது, இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அலுவலகத்தில் உள்ளது. கணக்கு தணிக்கை அலுவலகம் தற்போது ரபேல் டீல் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் தொடங்கவுள்ள குளிர்காலக் கூட்டத் தொடரின்போது தனது அறிக்கையை சிஏஜி தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது அறிக்கையில் இந்த அதிகாரியின் ஆட்சேபனை, ரபேல் போர் விமானத்தின் விலை, அதிகாரி தெரிவித்த ஆட்சேபனை விவரம் உள்ளிட்டவற்றையும் சிஏஜி குறிப்பிடக் கூடும் என்பதால் குளிர்காலக் கூட்டத் தொடரில் அணுகுண்டு வெடிக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ரபேல் டீல் ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவானது இந்திய விமானப்படையின் தலைமை தளபதி தலைமையில் செயல்பட்டது. இந்தக் குழுவானது பிரெஞ்சு குழுவுடன் கிட்டத்தட்ட 12 முறைக்கு மேல் கலந்து பேசியது. அதன் பின்னரே முடிவுக்கு வந்தது.
இந்த விவாதங்களின்போதுதான் பிரெஞ்சு தரப்பில் கூறப்பட்ட ஒரு ரபேல் விமானத்தின் (36 ரபேல்) அடிப்படை விலை தொடர்பாக இணைச் செயலாளர் ஆட்சேனை தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் வந்த பாஜக அரசால் கைவிடப்பட்ட 126 ரபேல் விமானத்தின் அடிப்படை விலையை விட இந்த விலை அதிகமாக இருந்ததே அதற்குக் காரணம்.
2007ம் ஆண்டு முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது 126 ரபேல் விமான திட்டம் முன்வைக்கப்பட்டது. அதைத்தான் பின்னர் வந்த மோடி அரசு ரத்து செய்தது. இறுதியாக 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடியும், பிரெஞ்சு அதிபராக இருந்த ஹோலண்டேவும் இணைந்து 36 ரபேல் திட்ட ஒப்பந்தத்தை அறிவித்தனர்.
அந்த மூத்த அதிகாரி அனுப்பியிருந்த ஆட்சேபனைக் குறிப்பில் மேலும் பல பரபரப்புகள் பொதிந்துள்ளன.
- ஈரோபைட்டர் போர் விமானங்களைத் தயாரிக்கும் ஜெர்மனியின் இஏடிஎஸ் நிறுவம் இந்திய அரசுக்கு 20 சதவீத தள்ளுபடி விலையில் விமானங்களைத் தருவதாக கூறியிருந்தது. 2014ல் இது தெரிவிக்கப்பட்டது. இதை அரசு நிராகரித்து விட்டது.
- இதே அளவிலான 20 சதவீத தள்ளுபடியை நாம் ரபேல் விமான டீலிலும் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தவறி விட்டோம்.
- இந்திய விமானப்படை வசம் உள்ள சுகோய் 30 எம்கேஐ போர் விமானங்கள் ரஷ்யாவைச் சேர்ந்தவையாகும். இவற்றை கட்டமைப்பது பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனம். தற்போது ரபேல் விமானத்திற்காக நாம் பேசியுள்ள தொகைக்கு கூடுதலான சுகோய் விமானங்களை பெற முடியும்.
[ ஆதார் வழக்கு.. தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு சட்டம் கொண்டு வர யோசனை?! ]
இவரது இந்த ஆட்சேபனைக் குறிப்புகளால் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தருவதில் மத்திய அமைச்சரவைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புத்துறை கொள்முதல் பிரிவு இயக்குநர் ஜெனரலும், இந்திய விமானப்படைத் தரப்பும் இதை புறக்கணிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவைக் குழு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த மூத்த அதிகாரி ஒரு மாத விடுப்பில் போயுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.