காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் படத்துடன் இந்திராகாந்தி, தெரசா படம்... கடும் சர்ச்சை!
ஜம்மு சுற்றுலாத் துறை சார்பில் பெண் குழந்தைகள் தின கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட விளம்பரத்தில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் படத்துடன் இந்திராகாந்தி, தெரசா உள்ளிட்டோரின் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் பெண்குழந்தைகள் தின கொண்டாட்டத்திற்காக அரசு சார்பில் விளம்பரம் செய்யப்பட்ட பேனர்களில் பிரிவினைவாதத் தலைவர் படத்துடன் இந்திராகாந்தி, அன்னை தெரசா படம் இடம் பெற்றதால் சர்ச்சை வெடித்துள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையம் சார்பில் அனந்த்நாக் மாவட்டத்தில் கோகர்நேக் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சயில் பாஜக சமூக நலத்துறை அமைச்சர் சஜ்ஜத் லோன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் காஷ்மீர் பிரிவினை வாதத் தலைவர் அசியா அந்தெராபி படம் இடம் பெற்றிருந்தது. இவர் ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதுடன் நட்பு பாராட்டியவர். காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட்டவர்.

பிரிவினைவாதத் தலைவர் படத்தால் சர்ச்சை
பிரிவினைவாத பெண் தலைவர் படத்துடன், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் இரும்புப் பெண்மணியுமான இந்திரா காந்தி, சமூக சேவகர் அன்னை தெரசா உள்ளிட்டோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன. பெண் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் படத்தில் பிரிவினைவாதத் தலைவர்களின் படம் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரி விளக்கம்
இந்த தவறு குறித்து கருத்து தெரிவித்த நிகழ்ச்சி ஏற்பாட்டு அதிகாரி ஷமீனா அக்தர், பெண் தலைவர்கள் படத்துடன் விளம்பர பேனர் அச்சிடச் சொன்ன நிலையில், தவறுதலாக அதில் அசியா அந்தெராபியின் படம் இடம்பெற்றுவிட்டதாக தெரிவித்தார். இது கவனத்திற்கு வந்த உடனேயே விளம்பர பதாகை அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடவடிக்கை தேவை
எனினும் இந்த தவறு எப்படி நடந்தது என்று விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உள்ளூர் பாஜக வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்தச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரிவினைவாதத் தலைவர் படத்தால் சர்ச்சை
அந்தெராபேடியை பெண் ஐகானாக அச்சிடப்பட்டிருந்த விளம்பர பேனரில் கல்பனா சால்வா, சானியா மிர்சா, லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன. உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் பிரிவினைவாதத் தலைவரை பிரபலமாக சித்தரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications