ஆதார் அட்டை: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
டெல்லி: மத்திய அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்ற உத்தரவில் மாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சேவைகள், சம்பளம், வருங்கால வைப்பு நிதி பட்டுவாடா, திருமணம், சொத்து பதிவு செய்தல், நேரடி மானிய திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த தீர்ப்பில் மாற்றம் செய்ய வலியுறுத்தி மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் மானியம் சரியான நபருக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் தேவை என மத்திய அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.
உடனடி மனுவாக இதை ஏற்று இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் திட்டப்பணிகளை பெற ஆதார் அட்டை அவசியமில்லை என்ற உத்தரவில் மாற்றம் செய்ய மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதனிடையே ஆதார் அடையாள அட்டை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.