நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை
உத்தரபிரதேசத்தில் 15 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
கான்பூர்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 15 நாட்கள் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... அதேசமயம், இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் குளிர் மற்றும் பனிக் காலம் ஆரம்பமே படுதீவிரமாக உள்ளது.. எப்போதுமே பனியோ, குளிரோ ஆரம்பித்து, ஒருசில வாரங்களுக்கு பிறகுதான் அது மெல்ல மெல்ல தீவிரமாகும்.. ஆனால், இந்த வருடம் அப்படி இல்லை.
பனிக் காலம் துவக்கத்திலேயே குளிரும் தீவிரமாகி விட்டதால், பெரும்பாலான வட மாநிலங்களில் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்..
அடுத்த 4, 5 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும்.. சென்னையில் மழை எப்போது?.. வெதர்மேனின் முக்கிய தகவல்!
வெப்பநிலை வீழ்ச்சி
கடந்த மாதங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில், இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியது.. வெப்ப நிலை வீழ்ச்சி காரணமாக இந்த குளிர் வாட்டுகிறது.. குறிப்பாக, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி கொண்டிருக்கிறது. விடிகாலையில் இந்த குளிரின் தாக்கம் மிக தீவிரமாக காணப்படுகிறது.. இதனால் மக்கள் வெளியே வர முடியாத சூழல் அதிகாலை நேரங்களில் ஏற்பட்டுள்ளது.
வடமாநிலங்கள்
பெரும்பாலான மாநிலங்களில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டுவிட்டது.. சில மாநிலங்களில் மைனசுக்கும் கீழே சென்று நடுநடுங்க வைத்து கொண்டிருக்கிறது.. அதிலும் வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல பகுதிகளில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு சாலையே தெரியாத நிலை ஏற்பட்டது.
விலங்குகள்
லக்னோவில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள விலங்குகள் குளிரில் நடுங்காமல் இருப்பதற்காக, ஹீட்டர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் மாநிலம் தழுவிய குளிர்கால விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது... அதன்படி நேற்று டிசம்பர் 31 முதல், அடுத்த 15 நாட்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது... இந்த குளிர்கால விடுமுறையானது 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
விடுமுறைகள்
கடந்த சில தினங்களுக்கு முன்பும் இந்த மாநிலத்தில், குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறைகள் அவ்வப்போது அளிக்கப்பட்டது.. ஆனால் அவைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டங்களில் நிலவும் சூழலுக்கு ஏற்பவே விடுமுறையை அளித்து வந்தனர்... ஆனால், ஒட்டுமொத்த மாநிலமும் குளிரின் பிடியில் சிக்கி உள்ளதால், மாநிலம் தழுவிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
புது உத்தரவு
அதேசமயம், இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 15 நாட்கள் விடுமுறை முடிந்த பிறகு, நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் வரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது... மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உத்தரப்பிரதேச அரசு தன்னுடைய உத்தரவில் கூடுதலாக கூறியுள்ளது.
குளிர் காற்று
இதனிடையே, டெல்லியில் இன்று 2வது நாளாக தொடர்ந்து குளிர் காற்று வீசி வருகிறது... சப்தர்ஜங்கில் 3.8 டிகிரி செல்சியஸ், லோதி சாலையில் 4 டிகிரி செல்சியஸ், அயநகரில் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து குளிர் காற்று வீசி வருவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதைதவிர, மேலும் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் குளிர் காற்று வீசக்கூடும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அளவாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.