மும்பை: சக்திமில்ஸ் வளாக பலாத்கார வழக்கு: 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!
மும்பை: மும்பையில் சக்திமில்ஸ் வளாகத்தில் டெலிபோன் ஆபரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 4 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மும்பையை சேர்ந்த பெண் புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி,பணி நிமித்தமாக தனது சக ஆண் நண்பருடன் லோயர் பரேல் ரயில் நிலையம் அருகில் உள்ள சக்திமில்ஸ் வளாகத்தில் புகைப்படம் எடுக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த ஒரு கும்பல் உள்ளே வழி காட்டுவதாக கூறி அழைத்துச் சென்று, ஆண் நண்பரை அடித்து கட்டிவைத்துவிட்டு, பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்தது.
இந்த சம்பவம் அப்போது மும்பையில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, முகமத் அன்சாரி, சிராஜ் கான் மற்றும் அஷ்ஃபகி ஷேக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.
டெலிபோன் ஆபரேட்டர்
இதனிடையே இதே சக்திமில்ஸ் வளாகத்தில் வைத்து டெலிபோன் ஆபரேட்டராக பணியாற்றிய 18 வயது இளம்பெண் ஒருவரையும் இந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்திருந்தது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி நடந்தது.
வெளிச்சத்து வந்த பலாத்காரம்
மும்பை பெண் பத்திரிகையாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபோதுதான், பாதிக்கப்பட்ட அந்த டெலிபோன் ஆபரேட்டர் பெண்ணும் தாம் இந்த கும்பலால் சீரழிக்கப்பட்டது குறித்து புகார் செய்தார்.
4 பேர் குற்றவாளிகள்
இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளும் மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், மும்பை பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் என்று அறிவித்தது.
ஆயுள்தண்டனை
இதனிடையே இந்த டெலிபோன் ஆபரேட்டர் பலாத்கார வழக்கிலும் இளங்குற்றவாளி தவிர 4 பேர் மீதும், இதே நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என்றும், தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். அதன்படி டெலிபோன் ஆபரேட்டர் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கதறி அழுத குற்றவாளிகள்
தண்டனை அறிவிக்கப்பட்டதும் குற்றவாளிகள் அனைவரும் கதறி அழுதனர். நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவர்களது உறவினர்களும் தீர்ப்பை கேட்டதும் அழுதனர்.
பத்திரிக்கையாளர் பலாத்கார வழக்கு
இதில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, முகமத் அன்சாரி ஆகியோர் பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கிலும் குற்றவாளிகள் ஆவர்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் வழக்கிலும் குற்றவாளிகளுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை வரும் திங்கள் கிழமை வரை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்