சாத்வி தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, அவையை நடத்த விடுங்கள்: மோடி
டெல்லி: சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியதற்காக மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கேட்டுவிட்டார். அதனால் அவையை நடத்த விடுங்கள் என்று பிரதமர் மோடி இன்று ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய இணை சாத்வி நிரஞ்சன் ஜோதி, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர் உள்பட அனைவரும் ராமரின் பிள்ளைகள். இந்த சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை என்றார். அவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக சாத்வி தனது பதவியை ராஜினாமா செய்யக் கோரி எதிர்கட்சிகள் ராஜ்யசபாவில் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவையை நடத்த முடியாமல் சபாநாயகர் திணறி வருகிறார். இந்நிலையில் இன்றும் சாத்வி பிரச்சனையை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இன்று அவைக்கு வந்த பிரதமர் மோடி பேசுகையில்,
அமைச்சர் சாத்வி தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டார். அதனால் அவையை நடத்த விடுங்கள். இது நமக்கு எல்லாம் ஒரு பாடமாக அமைந்துள்ளது என்றார்.
ஆனால் மோடியின் பேச்சை கேட்க அவையினர் தயாராக இல்லை. அவர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை 15 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.