மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்புகிறார் ஷீலா தீட்சித்?
டெல்லி: கேரளா ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பக் கூடும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பதவியேற்ற பின்னர் 8வது ஆளுநராக ஷீலா தீட்சித் தமது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஷீலா தீட்சித், இனி எதிர்காலத்தில் என்ன செய்வது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.
டெல்லி மாநில் முதல்வராக 1998 முதல் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பதவி வகித்தவர் ஷீலா தீட்சித். காமன்வெல்த் ஊழல் விவகாரத்தில் ஷீலா தீட்சித் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
கேரளா ஆளுநராக..
டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கேரளாவின் ஆளுநராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டார். அப்போது, காமன்வெல்த் ஊழல் வழக்கில் இருந்து காப்பாற்றுவதற்காகவே ஷீலா தீட்சித்தை ஆளுநராக்கிவிட்டது காங்கிரஸ் என்று கூறப்பட்டது.
ராஜினாமா மறுப்பு
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பதவி ஏற்ற நிலையில் தமது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று ஷீலா தீட்சித் பிடிவாதம் காட்டினார். இதனால் அவர் மிசோரம் மாநிலத்துக்கு மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டது.
கேரளாவில் தீவிர ஆலோசனை
இந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக கேரளா ஆளுநர் மாளிகையில் தமது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார் ஷீலா தீட்சித். அப்போது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் டெல்லி அல்லது தேசிய அரசியல் தீவிரமாக ஈடுபடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
சிக்க வைக்காது காமன்வெல்த்
மேலும் காமன்வெல்த் ஊழல் வழக்கில் சிறைக்குப் போக வைக்கும் அளவுக்கான குற்றச்சாட்டுகள் ஷீலா தீட்சித் மீது இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இப்படி நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே டெல்லி சென்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை ஷீலா தீட்சித் சந்தித்தார்.
ஆளுநர் டூ அரசியல்
அதன் பின்னர் தமது பதவியை ராஜினாமா செய்தார். பொதுவாக ஆளுநர்களாக நியமிக்கப்படுவோர் அதன் பின்னர் தீவிர அரசியலுக்கு வந்தது இல்லை.
அடுத்த இன்னிங்ஸ்
ஷீலா தீட்சித் தமது அடுத்த இன்னிங்ஸை தொடங்கி புதிய அத்தியாயம் படைக்ககக் கூடும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.