கர்நாடகாவில் மராத்தியர்கள் மீது தாக்குதல்- 'கன்னட பயங்கரவாதம்' என சிவசேனா பாய்ச்சல்!
மும்பை: கர்நாடகா எல்லையில் மராட்டியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கன்னட பயங்கரவாதம்; இதை மத்திய அரசு ஒடுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியுள்ளது

பிரச்சனை என்ன?
கர்நாடக- மகாராஷ்டிரா மாநில எல்லையான பெல்காம் மாவட்டத்தில் மராட்டியர்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். நீண்டகாலமாக இரு மாநிலங்களுக்கும் இடையே பெல்காம் யாருக்கு சொந்தமானது என்ற பஞ்சாயத்தும் நீடித்து வருகிறது.
பெல்காம் மாவட்டத்தில் வாழும் மராட்டியர்கள் அதை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால் கர்நாடக அரசு இதனை எதிர்த்து வருகிறது. இதனாலேயே பெல்காமில் ஒரு சட்டசபை கட்டிடம் கட்டப்பட்டு ஆண்டுக்கு ஒரு முறை அங்கு கூட்டத் தொடரையும் நடத்தி வருகிறது கர்நாடகா அரசு.

எல்லூரில் வெடித்த சர்ச்சை
இந்த நிலையில் பெல்காம் மாவட்டம் எல்லூர் கிராமத்தில் மகாராஷ்டிரா மாநிலம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அப் பலகையை கடந்த 25-ந் தேதி கர்நாடக அரசு அதிகாரிகள் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசு பேருந்துகள் மீது சிவசேனா கட்சியினர் கற்களை வீசி தாக்கினார்கள்.
மராட்டிய எகிகரன் சமிதி (எம்.இ.எஸ்.) என்ற கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் அந்த அறிவிப்பு பலகையை வைத்தனர். அங்கு பாதுகாப்புக்கு சென்ற போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்.

தடை உத்தரவு- தடியடி
இதனால் பெல்காம் மாவட்ட எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கர்நாடக அதிகாரிகள் அந்த அறிவிப்பு பலகையை மீண்டும் அகற்றினர்.
இதற்கு எம்.இ.எஸ். கட்சி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் செய்தியாளர்களை தாக்கினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் இரு மாநில எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

கன்னட பயங்கரவாதம்
இந்த சம்பவம் பற்றி சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. "மும்பையிலும்தான் கர்நாடகா பவன், கர்நாடகா சங்கம் ஆகியவற்றின் கட்டிடங்கள் இருக்கின்றன. கர்நாடகாவில் மகாராஷ்டிரா மாநிலம் என்ற ஒரு போர்டை ஏற்க முடியாமல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலை அனைத்து அரசியல் கட்சிகளும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
இத்தகைய கன்னட பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை
இதனிடையே மகாராஷ்டிரா தொழில்துறை அமைச்சர் நாராயண் ராணேவின் மகன் நிதேஷ் ரானே, மும்பையில் கர்நாடாக நாளை கொண்டாட அனுமதிக்க மாட்டோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications