தேர்தலுக்கு முன் கூட்டணியை உடைத்து மீண்டும் ஒன்று சேர்ந்த பாஜக, சிவசேனா
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக, சிவசேனா கூட்டணியில் பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை பெரிதானதால் 25 ஆண்டு கால கூட்டணி உடைந்து இருகட்சிகளும் தனித்தனியே தேர்தலில் போட்டியிட்டன.
தேர்தலில் பாஜக 123 இடங்களை கைப்பற்றியபோதிலும் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி வைத்து தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாஜக சிவசேனாவுடன் பேச்சுவார்தை நடத்தியது. சிவசேனா துவக்கத்தில் அமைச்சர்கள் எண்ணிக்கை விவகாரத்தில் இறங்கி வர மறுத்தது.
இதனால் மைனாரிட்டி அரசு அமைக்க பாஜக முடிவு செய்தது. இதற்கிடையே பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர தாங்கள் தயார் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக சிவசேனா இன்று அறிவித்துள்ளது. சிவசேனாவுக்கு சட்டசபையில் 63 உறுப்பினர்கள் உள்ளனர்.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் ஆட்சி அமைக்க 145 பேராவது வேண்டும். இந்நிலையில் தான் பாஜகவுக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது அக்கட்சிக்கு நிம்மதியை அளித்துள்ளது.