பெங்களூர் டிராபிக் நெரிசலுக்கு முதல்வரும் தப்பவில்லை.. லீவுதானே என்று சொல்லாமல் கிளம்பி சிக்கினார்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் நகரின் டிராபிக் நெரிசல் பிரச்சினை உலக பிரசித்தி. இதன் உச்சமாக, நேற்று, அம்மாநில முதல்வரே நெரிசலில் சிக்கி திணறியுள்ளார்.
மெட்ரோ ரயில், மேம்பாலங்கள் அமைத்தல், சாலை அகலப்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டாலும், பெங்களூரு நகர மக்கள் தொகையின் ராக்கெட் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.
சாமானியர்கள் மட்டுமின்றி, மாநில முதல்வரான சித்தராமையாவும் நேற்று இதை நேரில் அனுபவித்தார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று விடுமுறை என்பதால் சித்தராமையா, பெங்களூரிலுள்ள காவிரி அரசு இல்லத்தில் ஓய்வெடுத்தார்.
நண்பர் வீடு
அப்போது, அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தாய் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பெங்களூர் ஆர்.டி.நகரில் வசிக்கும் அந்த நண்பர் வீட்டுக்கு சித்தராமையா காரில் கிளம்பினார். மதியம் 12.30 மணியளவில் காரில் சித்தராமையா புறப்பட்டு சென்றுள்ளார்.
முதலில் தகவல் இல்லை
அவருடன் பாதுகாப்பு போலீஸ் வாகனங்களும் பின்னால் புறப்பட்டு சென்றன. முதல்வர் புறப்பட்ட பின்பு தான், இதுபற்றி மற்ற போலீசாருக்கும், டிராபிக் போலீசாருக்கும், உரிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிய சித்தராமையா
இந்த திடீர் பயணத்தால், அவர் செல்லும் சாலைகளில் உடனடியாக பிற வாகனங்களின் போக்குவரத்தை தடுத்து நிறுத்த போலீசாரால் முடியவில்லை. மேக்கரி சர்க்கிள், விமான நிலைய ரோடு வழியாக டி.வி.டவர் ரோட்டில் சித்தராமையா செல்லும்போது, அவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
ஊர்ந்து சென்றார்
ஒரு வழியாக அவர் செல்ல வேண்டிய சாலைகளில் போக்குவரத்தை போலீசார் சரி செய்தார்கள். அதன்பிறகு, ஆர்.டி.நகருக்கு சென்ற முதல்வர் சித்தராமையா தனது நண்பரின் தாய் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.
ரம்ஜான் தினமும் டிராபிக்
இருப்பினும் சித்தராமையா தான் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ரம்ஜான் தினம் என்பதால் டிராபிக் நெரிசல் இருக்காது என நினைத்து சித்தராமையா முன் அறிவிப்பின்றி கிளம்பியுள்ளார். ஆனால், ரம்ஜான் தினத்தில் தொழுகையை முடித்துவிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் சாலைகளுக்கு வாகனங்களில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.