சீனா அங்கிட்டு மிரட்டினா சிலிகுரியிலும் கடும் நெருக்கடி தருவதா? சிக்கிம் முதல்வர் ஆதங்கம்
மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் கூர்க்காலாந்து போராட்டக் குழுவினரால் சிக்கிம் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் கவலை தெரிவித்துள்ளார்.
காங்டாக்: எல்லையில் சீனா மிரட்டிக் கொண்டிருக்கும் நிலையில் சிலிகுரியில் கூர்க்காலாந்து போராட்டக் குழுவினர் அத்தியாவசியப் பொருட்களை சிக்கிம் கொண்டு செல்ல அனுமதிக்காமல் இருப்பது வருத்தத்தைத் தருகிறது என அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங் கூறியுள்ளார்.
சிக்கிம் எல்லைப் பகுதியில் பூடானின் டோக்லாம் பீடபூமி பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சீனா போருக்கான முழு வீச்சில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் சிக்கிம் முதல்வர் பவன் சாம்லிங் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
கிழக்கு சிக்கிம் பகுதியில் இந்தியா- சீனா எல்லையில் போர் பதற்றம் நீடிக்கிறது. அதேநேரத்தில் அண்டையில் உள்ள டார்ஜிலிங் மலைப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.
சிலிகுரியில் சூறை
இதனால் சிலிகுரியில் சிக்கிம் வரும் வாகனங்கள் தடுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. இத்தனைக்கும் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை சிக்கிம் மக்களும் சிக்கிம் மாநில அரசும் ஆதரிக்கிறது.
எங்கேயும் பாதுகாப்பு இல்லை
இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதமும் அனுப்பியுள்ளோம். எல்லையில் மட்டுமல்ல கீழே இருக்கும் சிலிகுரியிலும் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அனுமதி மறுப்பு
எங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை சிலிகுரியில் அனுப்ப அனுமதிக்க மறுக்கிறார்கள். 22-வது மாநிலமாக இந்தியாவுடன் நாங்கள் இணைந்தோம்.
சான்ட்விச்
அப்படி நாம் இந்தியாவுடன் இணையாமல் போயிருந்தால் சீனாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே சிக்கி 'சான்விட்ச்' ஆகி இருப்போம். சிக்கிம் மக்கள் எல்லையில் ஊதியம் வாங்காத பாதுகாப்பு படையினராக இருக்கிறோம்.
நீர் ஆதாரம் நாங்களே..
மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கான நிதி நீர் ஆதாரமே சிக்கிம்தான்.. ஆனாலும் சிக்கிமுக்கான நெடுஞ்சாலைகளை முடக்குகிறார்கள். 30 ஆண்டுகளில் கூர்க்காலாந்து போராட்டங்களால் சிக்கிமுக்கு ரூ60,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கூர்க்காலாந்து போராட்டங்களால் சிக்கிம் சுற்றுலா கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு பவன் சாம்லிங் பேசினார்.