மோடியின் ஸ்மார்ட் சிட்டி கனவை நனவாக்க முன்வந்துள்ள சிங்கப்பூர்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க உதவி செய்வதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சரான தமிழர் கே. சண்முகம் இந்தியா வந்தார். அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை டெல்லியில் வைத்து சந்தித்து பேசினார்.
அந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் சிங்கப்பூர் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. அதே போன்று தென்-கிழக்கு ஆசியாவில் வியாபாரத்தை விரிவுபடுத் இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரை மையமாக கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது குறித்து ஸ்வராஜுடன் பேசினேன் என்று சுஷ்மாவை சந்தித்த பிறகு சண்முகம் தெரிவித்தார். இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் ஆகும்.
முன்னதாக கடந்த 2006ம் ஆண்டு மோடி தொழில் அதிபர்கள் குழுவை சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்தார் என்பது பலருக்கும் தெரியாது. குஜராத்தில் நடக்கும் வைப்ரன்ட் குஜராத் சந்திப்பின் பார்ட்னர் சிங்கப்பூர் ஆகும்.