213 மீனவர்களை மீட்க இந்தியா வருகிறார் இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன!!
இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில், "எமது 170 மீனவர்களும் 32 படகுகளும் தமிழ் நாட்டிலும் எஞ்சியவர்கள் ஆந்திர மாநிலத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் உள்ள இலங்கை மீனவர்களை சட்டப்படி விடுவிப்பதற்காக மாநில அரசாங்கம் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் அப்படி நடைமுறை வழக்கத்திலில்லை. ஒன்றிணைந்த விசாரணைக் குழுகூடி ஆராய்வதன் மூலமே சிறை வைக்கப்படும் மீனவர்கள் விடுவிக்கப்படுவது உண்டு. ஆனால் தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் அதனை நடைமுறைப்படுத்த இடம் அளிக்கவில்லை.
இந்தியாவிலுள்ள எமது தூதர அதிகாரிகள் இலங்கை மீனவர்களை பார்வையிடுவதற்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிறை வைக்கப்பட்டிருக்கும் எமது மீனவர்களுக்கு அவசியமான பொருட்களை வாங்க மீன்பிடி திணைக்களத் தினால் நான்கரை இலட்சம் ரூபா எமது இலங்கை தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தப் பொருட்களைக் கூட அவர்களிடம் ஒப்படைக்க அனுமதிக்கப்படவில்லை. இது மனித உரிமை மீறலாகும். இந்திய மத்திய மீன்பிடித் துறையமைச்சருடனான சந்திப்பின்போது நான் இந்தக் காரணங்கள் குறித்து தெளிவாக விளக்கமளிக்கவுள்ளேன் என்றார்.