கிருஷ்ண ஜெயந்தி விழா – தயிர்ப்பானை உடைக்க சிறுவர்களுக்கு தடை!
மும்பை: கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சிகளில் சிறுவர்களை பங்கேற்க வைக்கும் விழாக் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை போலீசார் எச்சரித்துள்ளனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
களை கட்டும் கொண்டாட்டம்:
ஆனாலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் தற்போதே கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன.
மனித பிரமிடுகள்:
ஒவ்வொரு வீதியிலும் மனித பிரமிடுகளை உருவாக்கி உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள தயிர் பானைகளை உடைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன.
தயிர் பானை உடைத்தல்:
கடந்தாண்டு நடந்த தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து இறந்தனர். இதனால் இந்தாண்டு நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கு தடை:
இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா, " தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி சிறுவர்களை பங்கேற்க வைக்கும் விழாக் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சம்பந்தபட்டவர்களே பொறுப்பு:
ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் சம்பந்தபட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்" என்று அவர் கூறினார். இதற்கிடையே மும்பையில் நேற்று நடந்த தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் ஒருவர் இறந்தார்.
மும்பை ஹைகோர்ட் தடை:
இதையடுத்து மும்பை ஹைகோர்ட் "தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே பங்கேற்க வேண்டும். 20 மீட்டர் உயரத்துக்கு மேல் தயிர் பானை கட்டக் கூடாது "என உத்தரவிட்டுள்ளது.