முதல்வரின் தண்ணீர் பாட்டிலில் நெளிந்த ‘பாம்புக் குட்டி’... அதிர்ச்சி படங்கள்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் மற்றும் மத்திய அமைச்சருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், அம்மாநில முதல்வர் ராமன் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அமன் அகூவா என்ற தனியார் நிறுவனம் 20 தண்ணீர் பாட்டில்களை வழங்கியிருந்தது. அந்த குடிதண்ணீர் பாட்டில்கள் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உட்பட அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அப்போது அங்கிருந்த தண்ணீர் பாட்டில் ஒன்றில் சிறிய பாம்புக் குட்டி ஒன்று நெளிவதை முதலமைச்சரின் மருத்துவ குழுவில் இருந்த மருத்துவர் ஒருவர் கண்டுபிடித்தார். உடனடியாக யாரும் அந்தக் குடிநீரைக் குடிக்க வேண்டாம் என அதிகாரிகள் உஷார் படுத்தினர். இதனால் யாரும் அந்த நீரைக் குடிக்கவில்லை.
அந்த தண்ணீர் பாட்டில்களைத் தயாரித்த நிறுவனம் சயீத் சபிக் அமான் என்பவருக்கு சொந்தமானது. அவரது தந்தை சயீத் அலி அமான் ராய்ப்பூர் மாவட்ட பாஜக துணைத்தலைவர் (சிறுபான்மை பிரிவு) ஆவார்.
பாட்டிலுக்குள் பாம்பு கிடந்தது பற்றி சயீத் சபிக்கிடம் கேட்டபோது, ‘இது தனக்கு எதிரான சதி என்றும், அந்த பாட்டிலை காட்டியபோது அதில் இருந்த சீல் உடைக்கப்பட்டிருந்தது' என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாஜக எம்.பி. சந்துலால் சாகு கூறுகையில், ‘இது ஒரு தீவிரமான விஷயமாகும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்றார்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் ராமன் சிங் கூறும் போது, ‘நாங்கள் உற்பத்தி நிறுவனத்தை அடையாளம் கண்டு உள்ளோம். விரைவில் இது குறித்து விசாரணை நடத்தப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.