மகளை குஜராத் அரசு உளவு பார்த்த விவகாரம்: மத்திய அரசு விசாரிக்க தடை கோரும் தந்தை
டெல்லி: குஜராத்தில் இளம் பெண்ணின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது குறித்து விசாரணை நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
2009ம் ஆண்டில், குஜராத்தில் ஒரு பெண்ணின் தொலைபேசி உரையாடல்கள் காவல்துறையால் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதற்கு அம்மாநில முதல்வர் மோடியின் உத்தரவுதான் காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், நீதிபதியை கொண்டு மோடிக்கு எதிரான புகாரை விசாரிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவெடுத்தது. இதுகுறித்து அறிந்ததும், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் மத்திய, மாநில அரசுகள் இதுதொடர்பான விசாரணையில் ஈடுபடுவது திருமணம் முடிந்த எனது மகளின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுத்துவிடும். எனவே அதுபோன்ற எந்த விசாரணையையும் நடத்த வேண்டாம் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், புகார்தாரரின் கோரிக்கை குறித்து பதிலளிக்க மத்திய மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே மத்திய அமைச்சர் கபில் சிபல் இன்று அளித்த பேட்டியில், பெண் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதியை கொண்டு மோடிக்கு எதிராக விசாரணை நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிடுவதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், இதுபோன்ற விசாரணையை நடத்த முடிவு செய்தால். அது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் பார்க்கப்படும் என்று கூட்டணி கட்சிகள் நினைப்பதால் மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரசும், தேசிய மாநாட்டு கட்சியும் மத்திய அரசின் கடைசி நேர முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.