சோனியா, ராகுல் 2 ஆண்டுகளுக்கு அரசியலை விட்டு விலக வேண்டும்: மூத்த காங். தலைவர் கருத்தால் பரபரப்பு
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் 2 ஆண்டுகளுக்கு அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜக்மீட் சிங் பிரார் தெரிவித்துள்ள கருத்தால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பியும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் முன்னாள் உறுப்பினருமான ஜக்மீட் சிங் பிரார்தான் காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிராக கலகக் கொடியை உயர்த்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் சோனியாவும், ராகுலும் 2 ஆண்டுகளுக்கு அரசியலைவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்.
இந்த இருவரும் புதிய தலைவரிடம் காங்கிரஸ் கட்சியை ஒப்படைக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளரும் ராஜினாமா செய்து புதியவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
காங்கிரஸ் தோல்விக்கு சோனியாவையும் ராகுலையும் மட்டுமே பொறுப்பாக்க வில்லை. இது அனைவரின் கூட்டு பொறுப்பு. 2 ஆண்டு ஓய்வுக்கு பின்னர் சோனியா மற்றும் ராகுல் காந்தி புதிய எழுச்சியுடன் கட்சி பணி ஆற்ற முடியும்.
இவ்வாறு ஜக்மீட்சிங் பிரார் கூறியுள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸ் தலைவரையும், துணை தலைவரையும் அரசியலைவிட்டு சிறிது காலம் விலகி இருக்குமாறு கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.