ஈராக்கில் சிக்கித் தவிக்கும் 46 கேரள செவிலியர்கள் – சுஷ்மா சுவராஜிற்கு உம்மன் சாண்டி கடிதம்!
திருவனந்தபுரம்: ஈராக்கில் சதாம் ஆதரவுப் படை வசமுள்ள திக்ரீத்தில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் 46 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஈராக்கில் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிவிட்டது. தற்போது பாக்தாத் நோக்கி அவர்களது கவனம் திரும்பியுள்ளது.
சதாம் ஆதரவுப் படை கைப்பற்றிய நகரங்களில் ஒன்று திக்ரீத். இது தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனின் சொந்த ஊர். இந்த திக்ரீத்தில் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்கள் பணியாற்றி வந்தனர். இதனால் அவர்களது கதி என்ன என்பது குறித்து குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் செவிலியர்கள் தரப்பிலிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், இது தொடர்பாக முதல்வர் உம்மன் சாண்டி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும் கேரள அரசு கூறியுள்ளது.
மாநில அரசை தொடர்பு கொண்ட கேரள செவிலியர்கள், தாங்கள் தாயகம் திரும்ப விரும்புவதாகவும், இதற்கு அரசின் உதவி தேவைப்படுவதாகவும் ஆனால் மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு எப்படி பத்திரமாக அழைத்து செல்லப்படுவோம் என அச்சம் கொண்டுள்ளதாகவும் கேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், செவிலியர்கள் தாயகம் செல்ல தடையில்லை எனவும், ஆனால் அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியறிய பின்னர் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என அவர்கள் பணிபுரியும் மருத்துவமனை கூறியுள்ளது.
இந்நிலையில் செவிலியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், "சர்வதேச செஞ்சிலுவை சங்கமானது ஈராக்கில் செவிலியர்கள் மிகவும் பாதுகாப்பாக மருத்துவமனைகளில் உள்ளதாக கூறியது" என்று இந்தியத் தூதரான ஏ.அஜய் குமார் பாக்தாத்திலிருந்து கூறியுள்ளார்.
இந்நிலையில் ஈராக்கில் சிக்கியிருக்கும் கேரளாவைச் சேர்ந்த செவிலியர்களை உடனடியாக மீட்டு, நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதி உள்ளார்.
செவிலியர்கள் மட்டும் இல்லாமல் ஈராக்கில் 15,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை பாதித்த பகுதிகளில் உள்ள இந்தியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.மேலும்,அவர்களுக்கான பாதுகாப்புகளையும் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகம் வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications