தென் மேற்குப் பருவக் காற்று தேனிப் பக்கம் வீசப் போகுது... சராசரிக்கும் குறைவான மழைதானாம்!
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு மே இறுதியில் தொடங்கும் என்றும் சராசரியை விட குறைவாகவே இருக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
திருவனந்தபுரம்: நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை வரும் முன்கூட்டியே அதாவது மே மாத இறுதியில் துவங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ஜோசப் கூறியுள்ளார். முன்கூட்டியே பருவமழை தொடங்கினாலும் எல்நினோ தாக்கத்தினால் குறைவாகவே மழை பெய்யும் என்றும் ஜோசப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த ஆண்டு தென்மெற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது. இதனால் தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி நிலவுகிறது. நடப்பாண்டிலும் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை
ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கும். கடந்த ஆண்டு ஒரு வார காலம் தாமதமாக துவங்கியது சராசரியை விட குறைவாகவே பெய்தது.
முன்கூட்டியே தொடங்கும் பருவமழை
இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் மே மாதம் 25ஆம் தேதி துவங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ஜோசப் கூறியுள்ளார். தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அக்னி நட்சத்திரம் முடிந்த உடனே தென் மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேகங்கள் திரளும் அறிகுறி
வழக்கமாக ஜூன் 1 முதல் பருவமழை காலம் துவங்கும் முன், வங்கக்கடலில், ஏப்ரல் 21 முதல் மழை மேகங்கள் திரள தொடங்கும். தற்போது இதற்கான அறிகுறிகள் இருப்பதாக செயற்கைகோள் படங்கள் மூலம் தெரிய வருகிறது. எனவே மே 25-ம் தேதி பருவமழை காலம் துவங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜோசம் தெரிவித்துள்ளார்.
பருவமழை குறையும்
எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பகுதியில் வெப்ப காற்று வீசுவதாகும். இதனால் நாட்டின் பருவமழையில் பாதிப்பு ஏற்படும். அந்த வகையில், விரைவில் துவங்க உள்ள தென் மேற்கு பருவமழையின், 2வது கால கட்டத்தில் எல் நினோ பாதிப்புகள் ஏற்பட துவங்க வாய்ப்பு உள்ளதாக ஜோசப் தெரிவித்துள்ளார். எல்நினோ தாக்கத்தினால் சராசரியை விட நடப்பாண்டு பருவமழை அளவு குறையலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.