எம்எல்ஏக்கள் பற்றி அவதூறு.. கர்நாடகாவில் 2 பத்திரிகை எடிட்டர்களுக்கு ஓராண்டு சிறை: சபாநாயகர் அதிரடி
பெங்களூர்: எம்எல்ஏக்கள் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதற்காக கர்நாடகாவில் இரு பத்திரிகை ஆசிரியர்களுக்கு தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரின் எலகங்கா தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் எஸ்.ஆர்.விஸ்வநாத். அதேபோல ஹாவேரி மாவட்டம், ராணிபென்னூர் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளவர் கே.பி.கோலிவாட்.
இதில் விஸ்வநாத் பற்றி எலகங்கா வாய்ஸ் என்ற டேப்லாய்ட் ஒன்றில் தப்பான செய்தி வந்ததாகவும், கோலிவாடுக்கு எதிராக ஹை பெங்களூர் என்ற டேப்லாய்டில் மோசமான கட்டுரை வந்ததாகவும் தெரிகிறது.

உரிமைமீறல் பிரச்சினை
இதுகுறித்து 2014ம் ஆண்டில் அப்போதைய சபாநாயகர் காக்கோடு திம்மப்பாவிடம், உரிமைமீறல் பிரச்சினையாக இவ்விருவரும் அளித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கோலிவாட் சபாநாயகராக்கப்பட்டு காக்கோடு திம்மப்பா அமைச்சராக்கப்பட்டுள்ளார். எனவே மீண்டும் அப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

வாக்கெடுப்புக்கு ஆதரவு
சட்டசபையில் நேற்று இந்த உரிமை மீறல் பிரச்சினை குறித்து விவாதித்து, வாக்கெடுப்புக்குவிடப்பட்டது. அப்போது அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெரும்பாலானோர் அவ்விரு பத்திரிகை எடிட்டர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாக்களித்தனர்.

எதிரான தீர்ப்பு
இதையடுத்து சபாநாயகர் தனது தீர்ப்பை வழங்கினார். சபாநாயகர் என்பவர் நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் என்பதால் அவர் தீர்ப்பளிக்க முடியும். எனவே இரு பத்திரிகைகளின் எடிட்டர்களுக்கு எதிராகவும் அவர் தீர்ப்பை வழங்கினார்.

ஓராண்டு சிறை
இதன்படி எலகங்கா வாய்ஸ் பத்திரிகை ஆசிரியர் அனில் ராஜு மற்றும் ஹை பெங்களூர் பத்திரிகை ஆசிரியரும் முன்னணி பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரவி பெலகெரே ஆகியோருக்கு தலா 1 வருடம் சிறை மற்றும் ரூ.10000 அபராதம் விதிக்கப்பட்டது. சட்டசபை செயலாளர் இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications