வைகுண்ட ஏகாதசி- திருப்பதியில் கூட்ட நெரிசலால் பக்தர்கள் காயம்... உணவு, தண்ணீர் கிடைக்காமல் அவதி
வைகுண்ட ஏகாதசியான இன்று திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயமடைந்தனர்.
Recommended Video
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியான இன்று திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலர் காயமடைந்தனர்.
வைணவ தலங்களில் இன்று வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 108 திவ்ய தரிசனங்கான திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருத்தலங்களில் இன்று காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள வைணவ திருத்தலங்களில் கூட்டம் நிரம்பி வழியும். ஆண்டுதோறும் திருப்பதியில் நாராயணகிரி பூங்கா அருகே கூடும் பக்தர்களே வைகுண்ட ஏகாதசியில் அனுமதிக்கப்படுவர்.
இன்றைய தினம் சிறப்பு தரிசனம், நடைபாதை தரிசனம் கிடையாது. இதனால் ஏராளமான பக்தர்கள் இங்கு கூடுவர். இந்நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியதால் வரிசையில் செல்வதற்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். சிலருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்யவில்லை என்று பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
வைகுண்டம் காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பியதால் பக்தர்கள் சாலைகள் முழுவதும் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.