Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருந்தில் பீர் சாப்பிட்டதைக் கண்டித்ததால் கேரள வீராங்கனை தற்கொலையா?

Subscribe to Oneindia Tamil

ஆலப்புழா: பரிசளிப்பு விழாவில் திருட்டுத் தனமாக பீர் அருந்தியதைப் பயிற்சியாளர் கண்டித்ததாலேயே கேரள மாணவிகள் நான்கு பேர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம், ஆலப்புழையில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) நீர் விளையாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வந்த 4 இளம் தடகள வீராங்கனைகள், நேற்று முன்தினம் மதியம் 3 மணிக்கு தாங்கள் தங்கி இருந்த விடுதியில் விஷப்பழங்களை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயற்சித்தனர்.

மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அம்மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அபர்ணா ராமச்சந்திரன் (15) என்ற வீராங்கனை நேற்று உயிரிழந்தார். அபர்ணா தேசிய அளவில் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார்.

கடிதம் சிக்கியது,,,

கடிதம் சிக்கியது,,,

இது தொடர்பாக கேரள மத்திய சரக போலீஸ் ஐ.ஜி., அஜித் குமார், நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, தற்கொலை முயற்சிக்கு முன்னதாக 4 வீராங்கனைகளும் கூட்டாக எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் அவர்கள், "நாங்கள் செய்யக்கூடிய சிறிய தவறுகள் கூட, மூத்த வீராங்கனைகளால் ஊதி பெருக்கப்படுகின்றன" என எழுதி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

பயிற்சியாளர் தான் காராணம்...

பயிற்சியாளர் தான் காராணம்...

பாதிக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெற்றோரும், உறவினர்களும் கூறுகையில், "மூத்த வீராங்கனைகளும், பயிற்சியாளர்களும் எங்கள் பிள்ளைகளுக்கு உடல் ரீதியிலும், மன ரீதியிலும் தொல்லைகள் கொடுத்துள்ளனர். பயிற்சியாளர்கள், பயிற்சியின் போது எங்கள் பிள்ளைகளை ஒரு பயிற்சியாளர் படகு துடுப்பால் தாக்கி உள்ளார். அபர்ணாவை 2 நாட்களுக்கு முன் பயிற்சியாளர் படகு துடுப்பால் தாக்கியதில், அவளால் உட்காரவோ நிற்கவோ முடியாமல் போய் விட்டது" என்றனர்.

மறுப்பு...

மறுப்பு...

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை விளையாட்டு மையம் மறுத்துள்ளது. இதற்கிடையே, பயிற்சியாளரின் துன்புறுத்தலால் தான் வீராங்கனைகள் தற்கொலைக்கு முயன்றனர் என்ற தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வீராங்கனைகளின் தற்கொலை முயற்சிக்கு வேறு காரணமும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பீர் குடித்த மாணவிகள்...

பீர் குடித்த மாணவிகள்...

இது தொடர்பாக ஆலப்புழை வடக்கு போலீஸ் உதவி ஆய்வாளர் ரமேஷன் கூறுகையில், "பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு விளையாட்டு ஆணையம் சார்பில் 2-ந்தேதி பரிசளிப்பு நிகழ்ச்சியையொட்டி ஒரு விருந்து நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீராங்கனைகள் யாருக்கும் தெரியாமல் பீர் கொண்டு வந்து குடித்துள்ளனர். இது எப்படியோ, மூத்த வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு தெரியவந்து, அவர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் இது குறித்து தங்கள் பெற்றோருக்கும், மற்றவர்களுக்கும் தெரிந்து விடுமோ என பயந்து, இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்" என்றார்.

நேரில் விசாரணை...

நேரில் விசாரணை...

பாதிக்கப்பட்டுள்ள வீராங்கனைகளை அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று கலெக்டர் பத்மகுமார் நலம் விசாரித்தார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

2, 3 நாட்களுக்கு பிறகுதான்...

2, 3 நாட்களுக்கு பிறகுதான்...

மேலும், "14, 16, 17 வயதான வீராங்கனைகள் சிகிச்சை பெற்று வந்தாலும், அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார்களா என்று கூற முடியாது. இது 2, 3 நாட்களுக்கு பிறகுதான் தெரியவரும். 2 பேருக்கு அவர்களது இதயத்தில் ‘பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது" என பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டன பேரணி...

கண்டன பேரணி...

பெற்றோர்கள், உறவினர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என இந்திய விளையாட்டு ஆணையமும் உறுதி அளித்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை கோரி ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் துணை அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.

நாடாளுமன்றத்திலும்...

நாடாளுமன்றத்திலும்...

இதற்கிடையே இந்த விவகாரம் நேற்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்த பிரச்சினையை கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.பி., எம்.வி. ராஜேஷ், காங்கிரஸ் எம்.பி., கே.சி. வேணுகோபால் ஆகியோர் எழுப்பினர். இறந்து போன வீராங்கனை தேசிய அளவில் பதக்கம் வென்றவர் என அவர்கள் சுட்டிக்காட்டியதுடன், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இரங்கல்...

இரங்கல்...

வீராங்கனை பலியானதற்கு இரங்கல் தெரிவித்து, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அறிக்கை வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘கேரளாவில் நடந்துள்ள இந்த சம்பவம், என்னை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் இறந்து போன இளம் வீராங்கனை, வளர்ந்து வந்த வீராங்கனை. அவரது இழப்பு மிகப்பெரிய இழப்பு. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த குடும்பத்துக்கு சாத்தியமாகிற அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

விசாரிக்க உத்தரவு...

விசாரிக்க உத்தரவு...

சம்பவ இடத்துக்கு இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குனர் நேரில் சென்று, நடந்தது என்ன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்தில், இந்திய விளையாட்டு ஆணையத்தை சேர்ந்த யாரும் குற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

நிதியுதவி...

நிதியுதவி...

இது தொடர்பாக கேரள விளையாட்டு துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "தேசிய படகு போட்டியில் பங்குபெறும் வீராங்கனைகள் 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் வருத்தம் தருகிறது. இதில் ஒரு வீராங்கனை பலியாகி உள்ளார். அவரது குடும்பத்துக்கு நிதி உதவி செய்யப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீராங்கனைகளின் மருத்துவ செலவை கேரள அரசு ஏற்கும். சம்பவம் குறித்து மாநில விளையாட்டு துறை செயலாளர் விசாரணை நடத்துவார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+