16வது லோக்சபா: புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒருமனதாக தேர்வு!!
டெல்லி: 16வது லோக்சபாவின் சபாநாயகராக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 46 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சரவை கடந்தவாரம் பதவியேற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 16-வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கியது. இது குறுகிய கால கூட்டத்தொடர் ஆகும்.
முன்னதாக தற்காலிக சபாநாயகராக காங்கிரஸ் மூத்த எம்.பி கமல்நாத் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சாலை விபத்தில் பலியான மத்திய அமைச்சர் முண்டேவுக்கு இரங்கல் தெரிவித்து முதல்நாள் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப் பட்டது.
பின்னர் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத் தொடரில் 16வது லோக்சபாவிற்கு தேர்வு செய்யப் பட்ட உறுப்பினர்கள் தற்காலிக சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
இதனிடையே ஏற்கனவே திட்டமிட்டபடி, இன்று புதிய சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. புதிய சபாநாயகராக பாஜக மூத்த எம்.பி. சுமித்ரா மகாஜனை பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார்.
அவரை அத்வானி, சுஸ்மா ஸ்வராஜ், ராஜ்நாத்சிங், மல்லிகார்ஜூன கார்கே, தம்பிதுரை உள்ளிட்ட 19 எம்.பிக்கள் வழிமொழிந்தனர். இதைத் தொடர்ந்து ஒரு மனதாக சுமித்ரா மகாஜன் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சபாநாயகர் இருக்கையில் இருந்து கமல்நாத் எழுந்து கொள்ள சுமித்ரா மகாஜன் இருக்கையில் அமர்ந்தார். பின்னர் சபையை சுமித்ரா மகாஜன் நடத்தினார்.
8வது முறை...
72 வயதான சுமித்ரா மகாஜன் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து தற்போது 8-வது முறையாக தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இணையமைச்சர்...
கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான அரசில் இணையமைச்சராகவும் இவர் பதவி வகித்து உள்ளார்.
நாடாளுமன்றக் குழு தலைவர்...
அனைத்து கட்சியினருடனும் நட்புறவுடன் பழகும் சுமித்ரா, நாடாளுமன்ற குழுக்களின் தலைவராகவும் இருந்துள்ளார்.
மீண்டும் பெண் சபாநாயகர்...
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்ற சபாநாயகராக மீராகுமார் பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் நாடாளுமன்றத்தில் மீண்டும் பெண் ஒருவர் சபாநாயகராகியுள்ளார்.
துணை சபாநாயகர்...
இது ஒருபுறம் இருக்க, துணை சபாநாயகர் பதவி அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் துணை சபாநாயகர் பதவி அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரைக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. உடனான உறவுகளை வலுப்படுத்த, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.