பிலிப்பைன்ஸ்சை தாக்கியது அதிபயங்கர ‘ஹையான்’ புயல்: ஒருவர் பலி
மணிலா: இன்று, பிலிப்பைன்ஸ் நாட்டை அதிபயங்கரமான புயலான ஹையான் தாக்கியது. அதனைத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளக்காடாக மாறி வருகிறது பிலிப்பைன்ஸ்.
மணிக்கு 235கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்றுடன் பிலிப்பைன்ஸ் நாட்டை ஹையான் என்று பெயரிடப்பட்டுள்ள அதிபயங்கர புயல் தாக்கியுள்ளது. புயலின் தாக்கத்தால் பெய்து வரும் கனமழையால், அங்கு சாலைகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
கனமழை மற்றும் சூறாவளிக் காற்றில் சிக்கி வீடுகள் இடிந்ததில், இடிபாடுகளுக்கிடையே சிக்கி ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகிள்ளது. மேலும், மின்சார சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதி மக்களை வீடுகளை விட்டு வெளியேறச் செய்து பாதுகாப்பான முகாம்களில் தங்க வைத்தது பிலிப்பைன்ஸ் அரசு. இதனால் அதிக அளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது.
புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தின் சேதாரத்திலிருந்து பிலிப்பைன்ஸ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் வேளையில், தற்போது ஹையான் புயல் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.