சன்குழும சொத்துக்கள் முடக்கத்துக்கு எதிரான வழக்கு... முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
டெல்லி : சன்குழும சொத்துக்களை முடக்க முடிவு செய்துள்ள அமலாக்கத்துறையின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, முன் கூட்டியே விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை நிறுத்தி வைத்தும், தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாகவும், அதன் மூலம் மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறொரு நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க் குழுமத்தில் முதலீடு செய்த வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
மாறன் சகோதரர்கள் மீது, ரூ.742 கோடி சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக (கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுதல் தடைச் சட்டம்) சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதில், ஒரு பகுதியாக மேக்சிஸ் நிறுவனம் சன்நெட்வொர்க் குழுமத்தில் ரூ.629 கோடி முதலீடு செய்ததாகக் குற்றம்சாட்டியது.
2ஜி ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ரூ.1,700 கோடி மோசடி செய்ததாக, அதற்கு விளக்கம் கோரி அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியது.இவ்வழக்கு தொடர்பாக தயாநிதி மாறனிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தயாநிதி மாறன், கலாநிதி மாறனுக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கப் பிரிவு அறிவித்தது.
ஆனால் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு 2ஜியுடன் தொடர்புடையதா? என வரும் 8ம் தேதி விசாரிக்க முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன் ஆஜராகிய அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், 2ஜி வழக்கு விசாரணையைக் காரணம் காட்டி இந்த விசாரணையை விரைவாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 7ம் தேதியே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.