போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் ஆய்வு.. “எந்த முடிவும் எடுக்க கூடாது!” உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
போபால்: மத்தியப் பிரதேசத்தின் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தங்களின் அனுமதியின்றி தொல்லியல் துறை ஆய்வு முடிவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தில் இஸ்லாமியர்கள் சுமார் 800 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த கட்டிடம் அமைந்துள்ள இடம் இந்து கோயிலுக்கு சொந்தமானது என்றும், கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்றும் நீதிக்கான இந்து முன்னணி எனும் அமைப்பு கூறி வருகிறது. இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தது.

அதில், 14ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜின் ஆட்சிக்காலத்தில் இங்கு இருந்த சரஸ்வதி கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது. எனவே இந்திய தொல்லியல் துறை இந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். இங்கு மீண்டும் சரஸ்வதி சிலை நிறுவப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதி கட்டிடத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கடந்த 11ம் உத்தரவிட்டிருக்கிறது. 6 மாதங்களுக்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று தொல்லியல் துறையினர் கட்டிடத்தில் ஆய்வை தொடங்கினர். இன்று இரண்டாம் கட்ட ஆய்வை நடத்துகின்றனர். ஆய்வின்போது ரேடார், போட்டோகிராபி, வீடியோகிராபி, கார்பன் டேட்டிங் ஆகியவை பயன்படுத்தப்படும்.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்லாமிய அமைப்புகள் விமர்சித்துள்ளன. அயோத்தி போன்று இந்த பிரச்னையை சிலர் வளர்க்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனையடுத்து இந்த ஆய்வுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடினர். அதாவது, மௌலானா கமாலுதீன் நலச் சங்கம் சார்பில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மனு இன்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போஜ்சாலா கமால் மெளலா மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதியளித்துள்ளனர். அதே நேரம் அகழாய்வு போன்றவற்றை செய்ய கூடாது எனவும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். மேலும், தங்களின் அனுமதியின்றி தொல்லியல் துறை ஆய்வு முடிவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
போஜ்ஷாலா கமால் மெளலா மசூதியின் கட்டிடத்தின் உள்ளே உள்ள கட்டுமான அமைப்புகள் மிகுந்த கலை படைப்புடன் இருப்பதால், இதை இந்து கோயிலுடன் ஒப்பிடுவதாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
சமீப காலமாக குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் இந்து மதத்தை சேர்ந்வர்கள் இந்த கட்டிடத்தில் வழிப்பட தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே அயோத்தி பிரச்னை முடிந்து, ஞானவாபி பிரச்னை நடந்துக்கொண்டிருக்கையில், தற்போது புதிய சலசலப்புக்களை இந்த போஜ்ஷாலா கமால் மெளலா மசூதி கட்டிடம் தொடங்கி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications