ரொம்ப கேள்விகேட்டா இப்படித்தான்.. காங்கிரஸ் எம்.பியை டிவிட்டரில் பிளாக் செய்த சுஷ்மா சுவராஜ்!
காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வாவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் பிளாக் செய்து இருக்கிறார்.
டெல்லி: காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வாவை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டிவிட்டரில் பிளாக் செய்து இருக்கிறார். பிரதாப் சிங் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்ட காரணத்தால் சுஷ்மா சுவராஜ் இப்படி செய்து இருக்கிறார்.
ஆனால் பிரதாப் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் மட்டுமே சுஷ்மா சுவராஜிடம் கேள்விகள் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கே டிவிட்டரில் பிளாக் செய்யும் அளவிற்கு சுஷ்மா சுவராஜ் சென்று விட்டாரா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அவர் பிளாக் செய்த புகைப்படத்தையும் பிரதாப் சிங் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதேபோல் பாராளுமன்றத்தில் என்ன கேள்வி கேட்டேன் என்று வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
காணாமல் போனவர்கள்
கடந்த 2014ல் ஈராக்கில் 39 இந்தியர்கள் காணாமல் போனார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு அவர்களை பிணை கைதியாக பிடித்து வைத்து இருந்தது. அப்போது அவர்கள் அனைவரும் ஈராக்கின் மொசூல் நகரில் அடைத்து வைக்கப்பட்டனர். அங்கு இருக்கு ஜெயிலில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
|
பிரதாப் கேள்வி
இந்த நிலையில் அந்த ஜெயிலும் ஒரு மாதம் முன்பு தரைமட்டமாக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி பிரதாப் சிங் பஜ்வா பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார். அதில் ''அந்த ஜெயிலும் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது. இப்போதாவது அவர்களை கண்டுபிடிக்க முடியுமா என்று கூறுங்கள். அதைவிட்டுவிட்டு லோக் சபாவில் பொய்களை அவிழ்த்து விடாதீர்கள். இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுங்கள்'' என்று கேட்டார்.
சுஷ்மா பதில்
இதற்கு பதில் அளித்த சுஷ்மா ''அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று இப்போது கூட அறிவிக்க முடியும். அதன்பின் என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அப்படி என்னால் சொல்ல முடியாது. அவர்கள் குறித்த தெளிவான செய்திகள் வெளியாகும் முன்பு என்னால் எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ள முடியாது. அது மிகப்பெரிய பாவம்'' என்று கூறினார்.
|
பிளாக் செய்தார்
ஆனால் இந்த பதிலோடு நிற்காமல் சுஷ்மா பிரதாப் சிங்கை பிளாக் செய்துள்ளார். பிரதாப் சிங் தனது டிவிட்டரில் அதை ஷேர் செய்து ''இதுதான் வெளியுறவு துறையை நடத்தும் லட்சணமா. காணாமல் போன 39 இந்தியர்களை பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பிளாக் செய்வார்களா?'' என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.