காங்கிரஸ் எம்.பிக்கள் சஸ்பெண்ட்: கருப்பு பட்டை அணிந்து சோனியா, மன்மோகன்சிங் போராட்டம்!
டெல்லி: காங்கிரஸ் எம்.பிக்கள் 25 பேரை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வியாபம் முறைகேடு தொடர்பாக ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், ஐபிஎல் மோசடி மன்னன் லலித் மோடிக்கு உதவியதாக வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோரை பதவி விலக வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தர்ணாவிலும், கூச்சல் குழப்பத்திலும் ஈடுபட்டு வருகின்றன.
நேற்றைய போராட்டத்தின்போது, கையில் பதாகைகளுடன், அவையின் மையப்பகுதிக்கு வந்து போராடியதால், மொத்தமுள்ள 44 காங்கிரஸ் எம்.பிக்களில் 25 பேரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தார். சமீபத்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற அதிரடி நடவடிக்கை சபாநாயகரால் எடுக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியின் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சபாநாயகரின் நடவடிக்கை ஜனநாயக படுகொலை என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்த கட்சியினருக்கு அழைப்புவிடுத்தார். அதன்படி, நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே உள்ள காந்தி சிலை அருகே சோனியா தலைமையில் காங். எம்பிக்கள், தலைவர்கள் இன்று தர்ணா நடத்தினர்.
ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் இதில் பங்கேற்றனர். அவர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்ததோடு, அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சியின் சில எம்.பிக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய சோனியா காந்தி, "சபாநாயகர் நடவடிக்கை ஜனநாயக படுகொலை" என்றார், மன்மோகன்சிங் "சஸ்பெண்ட் செய்வது எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது" என்றார். ராகுல் காந்தி "25 எம்.பிக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழைக்கப்பட்ட அநீதியாகும். முதல்வர்கள் மற்றும் அமைச்சரை பதவி நீக்க கோரும் எங்கள் கோரிக்கையில் பின்வாங்க மாட்டோம்" என்றார்.
இதனிடையே, ராஜ்யசபாவில், அரசுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் காலை முதல் மதியம் வரை அவையில் எந்த அலுவலும் நடைபெறவில்லை.