சதாம் ஆதரவுப் படையை எதிர்கொள்ள ஈராக்குக்கு இந்தியாவும் உதவ வேண்டுமாம்: சொல்வது சு.சுவாமி
டெல்லி: உள்நாட்டுப் போரை எதிர்கொண்டு இருக்கும் ஈராக்குக்கு இந்தியா ராணுவம் மற்றும் நிதி உதவி அளித்து வன்முறையை கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈராக்கில் ஆட்சியில் இருக்கும் அதிபர், பிரதமர் உள்பட முக்கிய தலைவர்கள் அனைவரும் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். அவர்கள் சன்னி முஸ்லிம்களை பழிவாங்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றனர் என்பது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத படைகளின் குற்றச்சாட்டாகும்.
இந்த தீவிரவாத குழுக்கள் பக்கத்து நாடான சிரியாவில் செயல்பட்டு வந்தது. சிரியாவின் ஒரு பகுதியையும் ஈராக்கையும் சேர்ந்து இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் ஒரு நாட்டை உருவாக்குவது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் திட்டமாகும்.
3 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் அதிபருக்கு எதிராக உள்நாட்டு போர் வெடித்தது. அதில் அரசு படைகளுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரதிவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் சிரியாவில் அல்ராக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை ஏற்கனவே கைப்பற்றி இருந்தனர்.
ஈராக் மீது தாக்குதல்
அதைத்தொடர்ந்து ஈராக்கையும் கைப்பற்றும் நோக்கில் திடீரென தாக்குதல் நடத்தினர். ஈராக்கின் 2-வது தலைநகரமான மொசூல் நகரை முதலில் அவர்கள் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து சதாம்உசேனின் சொந்த ஊரான திக்ரித், மற்றும் பலுஜா ஆகிய நகரையும் கைப்பற்றினார்கள்.
தற்போது தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் முன்னேறி வருகிறார்கள். எந்த நேரத்திலும் பாக்தாத்தை தீவிரவாதிகள் கையில் விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதவி கோரிய ஈராக்
தலைநகருடன் மற்ற முக்கிய நகரங்களையும் காப்பாற்றும் நோக்கத்துடன் அமெரிக்காவின் உதவியை ஈராக் நாடியுள்ளது. அமெரிக்கா தீவிரவாதிகள் மீது போர் தொடுத்தால் மட்டுமே ஈராக்கை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா கைவிரிப்பு
அமெரிக்கா தலையிட மறுத்துவிட்டால் ஈராக் முழுவதும் தீவிரவாதிகளின் பிடியில் சிக்குவது தவிர்க்க முடியாததாக ஆகி விடும். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போராட ஷியா முஸ்லிம் பிரிவனரும் தயாராகி வருகிறார்கள். எனவே ஈராக் முழுவதும் ரத்த ஆறு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் உதவி
இந்தநிலையில் ஈராக்குக்கு இந்தியா உதவ வேண்டும் என்று சுப்மரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈராக் பிரதமர் நூரி அல் மாலிகின் அரசுக்கு ராணுவம் மற்றும் நிதி உதவியை நரேந்திர மோடி அரசு அளித்து ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவிற்கு பாதிப்பு
மேலும் ஈராக்கில் நடக்கும் போர், இந்தியாவில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. எனவே இந்த விவகாரத்தில் இந்திய அரசு தெளிவான முடிவை எடுக்க வேண்டும்.
தொலைநோக்கு அணுகுமுறை
நீண்ட காலமாக தொடர்ந்து வரும் சன்னி - ஷியா பிரிவினரிடையேயான மோதலை, தொலைநோக்கு அணுகுமுறையோடு இந்திய அரசு தடுத்து நிறுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.