ஆப்கனில் திருமண நிகழ்வில் பாடல்கள்.. கடுப்பான தாலிபான்கள் துப்பாக்கி சூடு? 3 பேர் பலி, பலர் படுகாயம்
காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் திருமணத்தின் போது பாடல்கள் ஒலிபரப்பபட்ட நிலையில், அதை நிறுத்த தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும், இது தொடர்பாக தாலிபான் அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை போல தங்களை காட்டிக் கொண்ட மூன்று பேர், அங்கு திருமண வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தினர்.

3 பேர் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த திருமண விழாவில் புகுந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் தாலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறிக் கொண்டனர். மேலும், அங்கு சத்தமாக மிகவும் சத்தமாக ஒலிக்கப்படுவதாக கூறிய அவர்கள் திடீரென தங்களிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு சுட தொடங்கினர். இதில் திருமண நிகழ்வில் பங்கேற்ற குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாலிபான்கள் விளக்கம்
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் தாலிபான் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அவர்களில் இரண்டு பேரை கைது செய்துள்ளதாகவும் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், "கடந்த வெள்ளிக்கிழமை நங்கர்ஹரின் ஷாம்ஸ்பூர் மார் குண்டி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில், தங்களை தாலிபான்கள் என்று சொல்லிக் கொண்ட மூன்று பேர் புகுந்து, அங்கு ஒலித்து வந்த பாடலை நிறுத்தினர்.

உரிய தண்டனை
அப்போது அங்கு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ள தங்களை தாலிபான்கள் என்ற காட்டிக் கொண்டு அவர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஷரியா சட்டத்தின்படி உரிய தண்டனை அளிக்க்பபடும்" என்று தெரிவித்தார்.

உறவினர்கள் மறுப்பு
இருப்பினும், தாலிபான்களே தங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர். முந்தைய தாலிபான்கள் ஆட்சியில் பொது இடங்களில் பாடல்களை ஒலிபரப்ப தடை விதிக்கப்பட்டிருந்தது. புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசும் இது தொடர்பாக எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. திருமண நிகழ்வின் போது தனி அறையில் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது தாலிபான்களே துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டனர்.












Click it and Unblock the Notifications