பிச்சை எடுத்து மோடியிடம் பணம் கொடுக்க முயற்சி.. டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது
டெல்லி: டெல்லியில் தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம், நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 62வது நாளாக நடைபெற்றது.
போராட்டத்தின் ஒரு பகுதியாக நூதன வழிமுறையை கையில் எடுத்தனர். விவசாயிகள் நாள் முழுக்க பிச்சை எடுத்தனர். இதில் ரூ.6 ஆயிரத்து 666 வசூல் ஆனதாக கூறப்படுகிறது.
இந்த பணத்தை பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கு எடுத்துச்சென்று அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்கள் திட்டமாகும். அதன்படி நேற்று போராட்டக்குழு தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்தனர் போலீசார். உடனடியாக தலையிட்டு மொத்தமிருந்த 28 பேரை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அவர்கள் ஏற மறுத்ததால் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்கள் நாடாளுமன்ற தெரு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.