கர்நாடகா தண்ணீருக்கு போராடுதாம், தமிழகம் கடலில் விட்டு வீணாக்குதாம்: கர்நாடக சட்டசபையில் கோபம்
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் இன்று, சர்வோதய கர்நாடக கட்சி எம்.எல்.ஏவும், கர்நாடக விவசாயிகள் சங்க தலைவருமான புட்டன்னய்யா பேசுகையில், கடந்த 8 வருடங்களாக கர்நாடகாவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆனால் சுமார் ஆயிரம் டிஎம்சிக்கும் மேலான தண்ணீரை தமிழகம் இக்காலகட்டங்களில் கடலில் வீணாக விட்டுள்ளது என்றார்.
காவிரி நதியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பளித்தது. இதனால் கர்நாடக விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியது கர்நாடக அரசு.
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், தீர்மானத்தை தாக்கல் செய்து, உறுப்பினர்கள் அதன் மீது விவாதித்து, ஒருமனதாக ஒப்புதல் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன் மீது சர்வோதய கர்நாடக கட்சி எம்.எல்.ஏவும், கர்நாடக விவசாயிகள் சங்க தலைவருமான புட்டன்னய்யா பேசுகையில், கடந்த 8 வருடங்களாக கர்நாடகாவிற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.
சுமார் ஆயிரம் டிஎம்சிக்கும் மேலான தண்ணீரை தமிழகம் இக்காலகட்டங்களில் கடலில் வீணாக விட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவுக்கு ஒவ்வொரு வருடமும் சுமார் 120 டிஎம்சி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதற்குத்தான் கர்நாடகா போராடுகிறது. ஆனால், கர்நாடகாவுக்கு, சண்டைக்கார மாநிலம் என்று பட்டம் கொடுக்கிறார்கள். தமிழகத்துக்கு பற்றாக்குறை எனும்போது கர்நாடகாவிடம் கேட்கிறது. நமக்கு ஏற்படும் பற்றாக்குறை தண்ணீரை யார் தருவார்கள்?
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிலும், வீணாகும் நீரை என்ன செய்வது என்று கூறப்படவில்லை. காவிரி விவகாரம் பற்றி கடந்த 25 வருடமாக இரு மாநில முதல்வர்களும் பேசிக்கொள்ளவேயில்லை. இது கூட்டாட்சிக்கு அழகு இல்லை. இவ்வாறு புட்டன்னய்யா தெரிவித்தார்.