பாலியல் வழக்கு.. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை.. கோவா கோர்ட் தீர்ப்பு!
கோவா: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா மாவட்ட நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் இவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
2013-ல் கோவாவில் ஓட்டல் ஒன்றில் சக பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது புகார் வைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சக பெண் பத்திரிகையாளரை லிப்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி, பலாத்காரம் செய்ததாக இவர் மீது புகார்வைக்கப்பட்டது .
2013 நவம்பரில் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவா போலீஸ் தருண் தேஜ்பால் மீது எப்ஐஆர் பதிவு செய்து இவரை கைது செய்தது. பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், பெண்களை துன்புறுத்துதல் என்று 341, 342, 354, 354-A, 354-B, 376(2)(f) , 376(2) ஆகிய பிரிவுகளின் கீழ் தருண் தேஜ்பால் மீது வழக்கு பதியப்பட்டது.
வழக்கு
தெஹல்கா பத்திரிகை நடத்திய பல ஸ்டிங் ஆப்ரேஷன்கள் காரணமாக தருண் தேஜ்பால் பழிவாங்கப்படுகிறார். இவர் மீது பொய்யான புகார் வைக்கப்படுகிறது என்றும் நிறைய விவாதங்கள் நிலவி வந்தன. தன் மீது விசாரணை நடத்த கூடாது என்று 2014ல் தருண் தேஜ்பால் மும்பை ஹைகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பெயில் அளிக்கப்பட்டது.
விசாரணை
கடந்த 2014 மே மாதத்தில் இருந்து இப்போது வரை தருண் தேஜ்பால் பெயிலில் இருந்தார். இவருக்கு எதிரான வழக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த புதன் கிழமை விசாரணை முடிந்த நிலையில், இன்று இந்த வழக்கில் கோவா மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி க்ஷமா ஜோஷி தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பு
அதில் தருண் தேஜ்பால் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 8 வருடமாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால், பாலியல் வழக்கில் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
இது குறித்து பேசிய தருண் தேஜ்பால், 2013ல் என் மீது பொய்யான புகார் வைக்கப்பட்டது.தற்போது நீதிமன்றம் என்னை நிரபராதி என்று தீர்ப்பளித்துள்ளது. உண்மையை நிலைநாட்டிய நீதிமன்றத்திற்கும், உண்மையின் பக்கம் நின்ற நீதிபதிக்கும் என்னுடைய நன்றி, என்று தருண் தேஜ்பால் கூறியுள்ளார்.