வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளம்... நிதியுதவி அறிவித்தது தெலுங்கானா அரசு
ஹைதராபாத்: கேரள மாநிலம் வெள்ளத்தால் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளதால் அந்த மாநிலத்துக்கு ரூ.25 கோடி நிதியுதவியை தெலுங்கானா அரசு அறிவித்தது.
கேரளத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கேரளா மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்ற மாநிலங்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக் கொண்டது.
இதைத் தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.5 கோடி நிதியுதவியை அளித்தார். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் ரூ.25 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு இயந்திரம்
இந்த நிதி விரைவில் கேரளத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் தலைமை செயலாளர் எஸ்.கே.ஜோஷிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் 2.5 கோடி மதிப்பிலான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் அனுப்பப்பட வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானா
இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் ராவ் கூறுகையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரளம் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவர்களுக்கு உதவுவது தெலுங்கானா மக்களின் பொறுப்பாகும்.
புத்துயிர் பெற உதவுங்கள்
தெலுங்கானாவில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர்களும் மக்களும் உதவ வேண்டும். அந்த மாநிலம் விரைவில் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாப் அரசும் நிதியுதவி
இதுபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் ரூ.10 கோடியை நிதியுதவியாக அறிவித்துள்ளார். பஞ்சாப முதல்வர் அமரீந்தர் சிங்கும் ரூ.5 கோடி நிதியுதவியும், மற்றொரு 5 கோடிக்கு நிவாரண பொருட்களை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.