9 மாதங்கள் முன்பே தெலுங்கானா சட்டசபையை கலைக்க சந்திரசேகரராவ் முடிவு ஏன்?
ஹைதராபாத்: சட்டசபையைக் கலைத்துவிட்டு முன்கூட்டியே பொதுத் தேர்தலை சந்திக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
தெலுங்கானாவின் சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு வரை உள்ளது. அதாவது லோக்சபா தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஏப்ரல்-மே மாதங்களில் தெலுங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றால் போதுமானது.
ஆனால் தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற விரும்பி சட்டசபையை கலைக்க முடிவு செய்துள்ளார்.
காலம் இருக்கே
சுமார் 9 மாதங்களுக்கு முன்பாகவே சட்டசபையைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் விரும்பிய பின்னணி காரணம் என்ன என்ற கேள்விகள் எழலாம். இது குறித்து நாம் பல தரப்பிலும் கேட்டறிந்த தகவல்கள் இதோ: 2014ஆம் ஆண்டு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி வென்றிருந்தது. 21 தொகுதிகளுடன் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சி 15 தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மூன்று தொகுதிகளையும் கைப்பற்றின.
கடந்த தேர்தல்
இதன்மூலம் தனிப்பெரும்பான்மையுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சிக்கு வந்தது. தனி மாநில கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற அந்த காலகட்டத்தில் கூட மெஜாரிட்டிக்கு சற்று அதிகமான தொகுதிகளில் மட்டுமே ராஷ்ட்ரீய சமிதி கட்சியால் வெல்ல முடிந்தது. ஆனால் இம்முறை நிலைமை அப்படி இல்லை. ஏற்கனவே ஆட்சி நடத்தி இருப்பதால் ஆட்சிக்கு எதிரான மக்களின் இயல்பான அதிருப்தி மனநிலையும் கட்சிக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது.
கவனம் செலுத்தலாம்
இதுபற்றி சந்திரசேகரராவ்வுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில் "மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சந்திரசேகரராவ் மனதில் இரு விஷயங்கள் ஓடிக் கொண்டுள்ளன. கூடுதல் இடங்களை வெற்றி பெற வேண்டும் என்பது அதில் ஒன்று. சட்டசபை தேர்தல் முடிந்து விட்டால் 2019 ஆம் ஆண்டில் லோக்சபா தேர்தலில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது. எனவே சந்திரசேகரராவ் தெலுங்கானா சட்டசபைக்கு இந்த ஆண்டுக்குள்ளேயே தேர்தல் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்" என்றனர்.
தேசிய அரசியல்
கடந்த இரு மாதங்களில் சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதை மக்கள், கவனித்திருக்க முடியும். தெலுங்கானாவில் தங்களது எதிர் கட்சி காங்கிரஸ் என்பதால் தேசியளவில் அக்கட்சி இருக்கும் கூட்டணியில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சேராது என்று சந்திரசேகரராவ் அறிவித்திருந்தார். பாரதிய ஜனதா கட்சியுடன் சந்திரசேகரராவ் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்து இரு முறை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார்.
பாஜகவிற்கு பக்கா ஆதரவு
நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பின் போது பாரதிய ஜனதா கட்சிக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆதரவளித்தது. ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலின் போதும் பாரதிய ஜனதா கூட்டணிக்கு தான் சந்திரசேகரராவ் கட்சி ஆதரவளித்தது. தென்னிந்தியாவில் வலுவான கூட்டணியை இம்முறை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. எனவே அதில் தனது கட்சி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று சந்திரசேகரராவ் விரும்புகிறார். தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியில் அவர் சேர மாட்டார் என்ற போதிலும், தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
வெற்றி உறுதி
சந்திரசேகரராவ் மகன் ராமாராவ் பேட்டி ஒன்றில் இப்படி தெரிவித்தார்: "முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடைபெற்றால், சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எளிதாக வெற்றி பெறும்" என்றார். அவர் அளித்த பேட்டி தனது தந்தையின் மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவதாக உள்ளது. லோக்சபா தேர்தலுக்கும், சட்டசபை தேர்தலுக்கும் தயாராக நன்கு நேரம் ஒதுக்க முடியும் என்பதுதான் சந்திரசேகர ராவின் இம்முடிவுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.