தெலுங்கானாவில் முதலாவது ஆட்சியை அமைக்கப் போவது யார்? நாளை வாக்குப் பதிவு!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் முதலாவது ஆட்சியை அமைக்கப் போவது யார் என்பதற்கான வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது.
நாட்டின் 29வது மாநிலமாக ஜூன் 2-ந் தேதி உதயமாகும் தெலுங்கானாவின் முதல் சட்டசபைக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 2.81 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 1.37 கோடி பேர் பெண் வாக்காளர்கள்.
தெலுங்கானாவின் மொத்த சட்டசபை தொகுதிகள் 119. மொத்தம் 1669 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்.
17 லோக்சபா தொகுதிகள்
அத்துடன் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 265 வேட்பாளர்கள் லோக்சபா தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.
பிரதான கட்சிகள்
தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) மற்றும் தெலுங்குதேசம்- பாஜக கூட்டணி பிரதான போட்டியாளர்கள்.
இதர கட்சிகள்..
இந்த கட்சிகளுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், மஜ்லிஸ் கட்சி, ஆம் ஆத்மி, லோக்சத்தா கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் தெலுங்கானா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் களத்தில் குதித்துள்ளன.
லோக்சபா தேர்தல் பிரபலங்கள்
தெலுங்கானாவில் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர் ராவ், அவரது மகள் கவிதா, லோக்சத்தா தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண், முன்னாள் டிஜிபி தினேஷ் ரெட்டி, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சயா ரத்தன், சிபிஐ செயலர் நாராயணா, மஜ்லிஸ் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் முக்கியமானவர்கள்.
சட்டசபை தேர்தல் பிரபலங்கள்
லோக்சபா தேர்தலுக்குப் போட்டியிட்டாலும் தெலுங்காவின் முதல் முதல்வாராக வாய்ப்பு கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பில் மேடக் மாவட்டத்தின் காஜ்வெல் சட்டசபை தொகுதியிலும் டி.ஆர். எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் போட்டியிடுகிறார். அவருடன் முதல்வர் கனவில் இருக்கும் தாமோதர ராஜநரசிம்ஹா, கீதா ரெட்டி, காங்கிரஸின் நடிகை விஜயசாந்தி ஆகியோரும் முக்கிய பிரபலங்கள்.
காங்கிரஸ்- சிபிஐ கூட்டணி
தெலுங்கானாவில் சில மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு படைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது சாதகமான அம்சமாக இருக்கிறது. இது டி.ஆர்.எஸ். அக்ட்சிக்கு பின்னடைவாக இருக்கிறது.
பவன் கல்யாண் ஆதரவால் பாஜக அணிக்கு பலம்
தெலுங்குதேசம்- பாஜக அணிக்கு நடிகர் பவன் கல்யாணின் ஆதரவு கூடுதல் பலமாக கருதலாம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கானாவிலும் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கிறது.
நாளை வாக்குப்ப் பதிவு
சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவில் பல பகுதிகள் மாவோயிஸ்டுகள் செல்வாக்குள்ள இடங்களாக இருப்பதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.