மும்பை நீதிமன்ற வளாகத்தில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி அஃப்சல் உஸ்மானி 'எஸ்கேப்'!
மும்பை: இந்தியன் முஜாஹிதீன் இயக்க தீவிரவாதி அஃப்சல் உஸ்மானி மும்பை நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி தலைமறைவாகிவிட்டான். அவனை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008ஆம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி சில மணி நேரங்களில் 20 குண்டு வெடிப்புகள் சம்பவம் நடந்தேறின. இதில் 50 பேர் பலியாகினர். 200 பேர் படுகாயமடைந்தனர். அதற்கு அடுத்த நாள் சூரத் நகரில் இருந்து 22 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த வழக்கில் 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ந் தேதியன்று உத்தரப்பிரதேசத்தில் பதுங்கியிருந்த அஃப்சல் உஸ்மானி சிக்கினான். இவன் மும்பை நிழல் உலக தாதாக்கள் குழுவைச் சேர்ந்தவன். பின்னர் இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தில் இணைந்தான்.
இவனை இன்று வழக்கு விசாரணைக்கான நீதிமன்றத்துக்கு போலீசார் அழைத்து வந்திருந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து திடீரென மாயமாகிப் போனான் அஃப்சல் உஸ்மானி. அவனைத் தேடிக் கண்டுபிடிக்க போலீஸ் மும்முரமாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.