வங்கத்தில் தீதி-பாஜக இடையே நீயா-நானா போட்டி.. கடைசியில் முந்துவது பாஜக.. ரிபப்ளிக் கருத்து கணிப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருக்கும் என்று ரிபப்ளிக்- சிஎன்எக்ஸ் இணைந்து வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறியுள்ளது.
மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடது சாரி கூட்டணியும் களத்தில் மல்லுக்கட்டுகின்றன.
தட்டித் தூக்கும் திமுக.. தமிழகத்தில் 170 இடங்கள் வெல்லும்.. அதிமுகவுக்கு 68.. ரிபப்ளிக் எக்சிட் போல்
தேர்தல் கருத்து கணிப்பு
ஏற்கனவே தேர்தல் முந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரு சில கருத்து கணிப்புகள் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன. வேறு சில கருத்து கணிப்புகள் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவும் என்று தெரிவித்தன.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
பாஜக-திரிணாமுல் இடையே போட்டி
இந்த நிலையில் ரிபப்ளிக்- சிஎன்எக்ஸ் இணைந்து வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக 138 முதல் 148 வரையிலான இடங்களை பெறும் என்று கூறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 128 முதல் 138 இடங்களை பெறும் என்று தெரிவித்துள்ளது. காங்கிரஸ், இடது சாரி கட்சிகள் 11 முதல் 21 வரையிலான இடங்களை பெறும் என்கிறது.
மம்தாவுக்கு நெருக்கடி
அதாவது பாஜக-திரிணாமுல் இடையே பலத்த போட்டி இருக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகிறது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் சுவேந்து அதிகாரிக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி கட்சி 211 இடங்களை வென்றது. அந்த வகையில் பார்த்தால் இப்போது 73 இடங்களை அந்த கட்சி இழக்க போகிறது.
145 இடங்களை அதிகமாக பெறும் பாஜக
ஆனால் கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டுமே பெற்ற பாஜக 145 இடங்களை அதிகமாக பெறுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் எப்படி இருந்தாலும் வருகிற 2-ம் தேதி யார் ஜெயிக்க போகிறார்கள்? என்று இறுதியாக தெரிந்து விடும்.