சந்திரயான் 2 நிலவுப் பயணத்தின் முதல் வெற்றி.. புவி வட்டப் பாதையில் நுழைந்தது!
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவத்தை ஆராய ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் புறப்பட்ட சந்திரயான் 2, வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நுழைந்தது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் செயல்திறன் 15% அதிகரித்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
செயற்கைக்கோள் தற்போது நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ளது. அது மேலும் உயர்த்தப்பட்டு படிப்படியாக நிலவுக்கு நகரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சந்திரயான் 2 விண்கலத்தை ஏவ ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 20 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 6.43-க்கு துவங்கியது. இதனையடுத்து சரியாக இன்று பிற்பகல் 2.43 மணிக்கு, சந்திரயான் விண்கலத்தை சுமந்து கொண்டு ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. தற்போது புவிவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது சந்திரயான் 2.
முன்னதாக பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கடந்த 15-ம் தேதி செய்யப்பட்ட முதல் முயற்சியை போல இம்முறை ஏதேனும் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என உறுதிபட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவாரம் தாமதமாக புறப்பட்டாலும் ஏற்கனவே திட்டமிட்டப்படி செப்டம்பர் 7-ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்திலிருந்து விக்ரம் கலமும், பிரக்யான் ஆய்வு கலமும் நிலவில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட இரு கலங்களும் நிலவின் தென்துருவத்தில் தரையிரங்குவது முதல், இடைவிடாமல் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளன. அதே நேரத்தில் சந்திராயன் 2 விண்கலம் ஓராண்டு காலம் நிலவை சுற்றி வந்து முப்பரிமாண படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் பணியை செய்யும்.
முன்னதாக உலகிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த 15-ம் தேதி ஏவும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டு இருந்தது.
ஆனால் ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன் அதில் கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் கவுண்டவுன் திடீர் என நிறுத்தப்பட்டு சந்திரயான்-2 விண்கல பயணமும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். இந்த பணி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விண்ணில் பாய்வதற்கு ராக்கெட் தயாரானது. இதனையடுத்து நேற்று மாலை மீண்டும் கவுண்டவுன் துவக்கப்பட்டது
உலக நாடுகள் யாருமே இதுவரை ஆராய்சி செய்யாத நிலவின் தென்துருவத்தை நோக்கி சந்திரயான் 2 விண்கலம் இன்று தனது பயணத்தை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.