இது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை பிடிப்பதாக யார் வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு தான் தங்கள் ஓட்டு என பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
கேரளாவில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இப்போதே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கியுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் உள்ளூர் மக்களை சுற்றி சுற்றி வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இயற்கை எழில் கொஞ்சும் வயநாடு மாவட்டத்தின் கல்பேட்டாவில் உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரி சென்ற நபர்களிடம் விநோத வாக்குறுதி ஒன்றை அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
குரங்குகள் செய்யும் அட்டகாசத்தால் கடை நடத்த முடியாமலும் வீடுகளை விட்டு வெளியிடங்களுக்கு செல்ல முடியாமலும் கல்பேட்டா பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். குரங்குகளின் சேட்டையால் நிம்மதி இழந்து தவிக்கும் அவர்கள், குரங்குகளை பிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் வரை பல முறை முறையிட்டும் பலனில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரி சென்ற உள்ளூர் பிரமுகர்களிடம், குரங்குகளை பிடிப்பதாக நீங்கள் வாக்குறுதி தந்தால் நாங்கள் உங்களுக்கு ஓட்டுப் போடுவோம் இல்லையென்றால் நடையை கட்டுங்கள் என அதிரடியாக கூறி வருவதுடன் அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளனர்.
இதனால் கல்பேட்டா பகுதிக்கு ஆதரவு கோரி வருபவர்கள் சாலை அமைத்து தருகிறோம், குடிநீர் குழாய் இணைப்பு தருகிறோம் என வாக்குறுதிக் கொடுப்பதற்கு பதில் நான் உங்கள் பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்கிறேன் என வாக்குறுதி அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications