பாக். ஒருமுறை சுட்டால், நீங்கள் இருமுறை சுடுங்கள்.. பாலிசியை மாற்றிய இந்தியாவின் 'ஜேம்ஸ்பாண்ட்'
டெல்லி: பாகிஸ்தான் ஒரு முறை சுட்டால் இந்திய ராணுவம் இப்போதெல்லாம் பதிலுக்கு இருமுறை சுட ஆரம்பித்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்று அழைக்கப்படும், நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
சர்வதேச உளவு அமைப்புகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருக்கும் தோவல், பாகிஸ்தானிலேயே சில ஆண்டுகள் ரகசியமாக ஊடுருவி வேவு பார்த்தவர். இதனால்தான் அவர் இந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என அழைக்கப்படுகிறார்.
பாகிஸ்தானின் ரகசியங்கள் அனைத்தையும், விரல் நுனியில் வைத்திருப்பவர் அஜித் தோவல். எனவேதான், நரேந்திர மோடியின் சாய்ஸ் தோவலாக இருந்தது. பிரதமராக பதவியேற்கும் முன்பே அஜித் தோவல்தான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற தகவல் பரவத்தொடங்கியிருந்தது. முன்கூட்டியே முடிவு செய்துவிட்டுதான், அரியணை ஏறினார் மோடி.
ஆபரேஷன் சக்சஸ்
மோடியின் இந்த நம்பிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையில், கையில் எடுத்துக் கொண்ட முதல் ஆபரேஷனையே சக்சசாக முடித்தார் அஜித் தோவல். ஆம், வளைகுடாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த இந்திய நர்சுகளுக்கு ஒரு சேதமும் ஏற்படாமல் தாயகம் திருப்பி அழைத்து வந்ததில் அஜித் தோவல் பங்கை நாடு அறியும்.
சுட்டு தள்ளுங்கள்
கடந்த வருடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியபோது, அஜித் தோவல் கூறிய வார்த்தை, அவர்கள் ஒரு ரவுண்ட் சுட்டால், நீங்கள் பதிலுக்கு இரு ரவுண்டுகள் சுடுங்கள் என்பதுதான். அவர்கள் என்று அஜித் தோவல் கூறியது பாகிஸ்தானைத்தான். அஜித் தோவல் ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தபிறகுதான் இந்த அதிரடிக்கு தயாரானார்.
அமெரிக்கா ஆதரவு
மோடியின் அதிகப்படியான வெளிநாட்டு பயணங்கள், ராஜந்திர ரீதியிலானவையே தவிர, மீம்ஸ் போட்டு கேலி செய்வதற்கு அல்ல என்பதை இப்போதைய சூழல் எல்லோருக்கும் எடுத்துக் காட்டியுள்ளது. அதற்கு உதாரணம்தான், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினோம் என இந்தியா அறிவித்தபோதிலும், அதை அமெரிக்கா கண்டிக்கவில்லை என்பது. இன்னும் சொல்லப்போனால் தோவலுக்குதான் முதலில் போன் போட்டார் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ். தீவிரவாதத்தை ஒடுக்க உதவுவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
மோடியின் வலது கரம்
அஜித் தோவலின் அதிரடி இன்னும் தொடரும் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள். பாகிஸ்தானை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளுமாறும், அப்படிப்பட்ட காலங்களில் வாகா எல்லையில் கொடி மரியாதையை தவிர்த்துவிடுமாறும் அஜித் தோவல், எல்லை பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளாராம். மோடியின் வலது கரமாக செயல்பட்டுவரும் அஜித்தோவல்தான், இந்தியாவின் தற்போதைய தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்.
நடுங்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு மோடியைவிட அஜித் தோவல் பெயரை கேட்டால்தான் ஆட்டம் அதிகமாக இருக்கிறது. அங்குள்ள சோஷியல் மீடியாக்களும் அஜித் தோவலைத்தான் கரித்துக் கொட்டுகின்றன. இந்தியாவின் மிதவாத பாதுகாப்பு பாலிசியை மாற்றிவிட்டார் அஜித் தோவல் என அலறுகிறார்கள். சோட்டா ராஜனை, அழகான காய் நகர்த்தல் மூலம் இந்தோனேஷியாவில் கைது செய்யவைத்து இந்தியாவுக்கு கொண்டுவந்ததில் தோவல் பங்கு முக்கியமானது. இவரது அடுத்த இலக்கு தாவூத் இப்ராஹிம்தான் என்கிறார்கள்.