”நாங்கள்ளாம் போலீஸ் தெரியும்ல” – 8 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற டுபாக்கூர்கள்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடையைச் சேர்ந்த ஊழியர்களிடம் கிரைம் பிராஞ்ச் போலீசார் என்று கூறி 8 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள பிரபல நகைக் கடைகள் அளிக்கும் ஆர்டரின் பேரில் தங்க நகைகள் செய்து தரும் பல நிறுவனங்கள் ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இயங்கி வருகின்றன.
அங்கு ஆர்டரின் பேரில் எவ்வளவு மதிப்புள்ள நகைகளையும் செய்துதரும் வகையில் இயங்கி வரும் நிறுவனங்களைக் கொண்டுள்ளனர்.
8 கிலோ தங்க நகைகள்:
அங்கு, ஆர்டரின் பேரில் செய்யப்பட்ட 8 கிலோ தங்க நகைகளைப் பெற்றுக் கொண்ட மும்பை நகைக்கடையின் பணியாளர்களான ஜித்தேன் பிரசாத், தேவேந்திரா ஆகியோர் ஹைதராபத்தில் இருந்து பெங்களூருக்கு சென்று, அங்கிருந்து மும்பைக்கு செல்லும் திட்டத்தில் லக்காடி காபுல் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
கிரைம் பிராஞ்ச் போலீசார்:
பெங்களூர் செல்லும் பஸ்சில் ஏற முயன்றபோது அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. தாங்கள் கிரைம் பிராஞ்ச் போலீசார் என்று கூறிய அந்த கும்பல் அவர்கள் கையில் இருந்த சூட்கேஸை சோதனையிட வேண்டும் என்று கூறியது.
சூட்கேஸை பறித்த கும்பல்:
இதற்கு அவர்கள் மறுக்கவே, சற்றும் எதிர்பாராத வகையில் அந்த சூட்கேஸை பறித்துக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அந்த நால்வரும் பஸ் நிலையத்தை விட்டு தப்பியோடினர்.
போலீசார் விசாரணை:
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ தங்க நகையை சில நொடிகளுக்குள் பறிகொடுத்த மும்பை நகைக்கடை ஊழியர்கள் இச்சம்பவம் தொடர்பாக அளித்த புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள சைபாபாத் போலீசார் இந்த கொள்ளைக்கு காரணமான குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.