குஜராத்தில் படுதோல்வி.. காங்கிரஸ் சரிவுக்கு இதுதான் காரணம்.. வாய்திறந்த ராகுல்.. என்ன சொன்னார்?
ஜெய்ப்பூர்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கடந்த முறை 77 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை 17 தொகுதிகளில் மட்டுமே வாகைசூடி பரிதாபமான நிலைக்கு சென்றது. இந்நிலையில் தான் குரஜாத் சட்டசபை தேர்தல் தோல்வியின் பின்னணி காரணம் பற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்வியால் துவண்டுபோன காங்கிரஸ் கட்சிக்கு இமாச்சல பிரதேச மாநில தேர்தல் வெற்றி சற்று ஆறுதலாக உள்ளது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரை என்பது காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாட்களில் கைக்கொடுக்கும் என அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
தொடர் தோல்வியை சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சியை புத்துயிர் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரை துவங்கினார்.
ஆமா..குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் ஜெயிக்க காரணம் என்ன? சூடான தகவலோடு வெளியான ஆய்வு முடிவு
பாரத் ஜோடோ யாத்திரை
இந்த யாத்திரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது. தற்போது இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தை கடந்து ராஜஸ்தானை அடைந்துள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அடுத்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
100வது நாள் யாத்திரை
இதனால் ராகுல் காந்தியின் யாத்திரை என்பது ராஜஸ்தானில் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில் தான் ராகுல் காந்தி யாத்திரை துவங்கி 100 நாளை கடந்துள்ளது. 100 வது நாளான இன்று ராகுல் காந்தி அங்குள்ள உயர்நீதிமன்றம் முதல் கிரிராஜ் தரன் மந்திர் வரை கட்சி தலைவர்களுடன் யாத்திரை சென்றார். அதன்பிறகு ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த வேளையில் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். இந்த வேளையில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணம் பற்றியும் கூறினார். இதுபற்றி ராகுல் காந்தி கூறியதாவது:
பாஜகவின் பினாமி
குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சி பாஜகவுக்கு பினாமியாக இருந்தது. ஆம்ஆத்மி கட்சி பாஜகவின் பி டீம். காங்கரிஸ் கட்சியை வீழ்த்த அவர்கள் 2 பேரும் கூட்டு சேர்ந்தனர். இந்த ஆம்ஆத்மி இல்லாமல் இருந்திருந்தால் ஆளும் பாஜகவை தோற்கடித்து இருப்போம். எங்களின் தோல்விக்கு ஆம்ஆத்மி கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. பாஜக இந்தியாவை பிளவுப்படுத்தி வருகிறது. வெறுப்பை பரப்பி ஒற்றுமையை குலைக்கிறது. இதில் பாஜக உறுதியாக உள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்ளும் நாளில் ஒவ்வொரு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்'' என ராகுல் காந்தி கூறினார்.
அசோக் கெலாட் குற்றச்சாட்டு
முன்னதாக ராஜஸ்தான் முதல்வரும், குஜராத் தேர்தல் பொறுப்பாளருமான அசோக் கெலாட்டும் குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு ஆம்ஆத்மி கட்சி தான் காரணம் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக அவர், ‛‛ஆம் ஆத்மி கட்சி செல்லும் இடமெல்லாம் பொய்களை கூறி வருகிறது. குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது''என்றார்.
ஆம்ஆத்மி மறுப்பு
இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி புறம்தள்ளியது. மாறாக காங்கிரஸ் கட்சியை ஆம்ஆத்மி விமர்சனம் செய்தது. அதன்படி குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியை நுழைய விடாமல் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளது என அக்கட்சி தெரிவித்து இருந்தது.
குஜராத்தில் நடந்தது என்ன?
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக சரித்திர வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைத்தது. மொத்தமுள்ள 182 சட்டசபை தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வென்றது. கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் தொடர்ந்து 7 வது முறையாக குஜராத்தில் அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
காங்கிரஸ் படுதோல்வி
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், ஆம்ஆத்மி கட்சி 5 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த நிலையில் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. கடந்த முறை பாஜக, காங்கிரஸ் இடையே மட்டுமே போட்டி இருந்த நிலையில் இந்த முறை ஆம்ஆத்மி கட்சியும் களமிறங்கியது. இதனால் ஆம்ஆத்மி கட்சி ஓட்டுக்களை பிரித்துவிட்டது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில் தான் ராகுல் காந்தியும் இப்படி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.