உலகிலேயே இந்தியா நம்பர் 1... செல்பி மரணத்தில்தான்... அதிர்ச்சி ஆய்வு
டெல்லி: செல்பி எடுப்பதால் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள், உயிரிழப்புகள் நடந்து கொண்டிருந்தாலும், இளைஞர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது அதன் மோகம்.இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட், செல்பி எடுப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து உலகம் முழுவதும் ஆய்வு நடத்தியது. அப்போது 2015ம் ஆண்டில் மட்டும் 27 பேர் செல்பி எடுத்துக் கொள்ளும் போது உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
அண்மைக்காலமாக, செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மோகம் வேகமாக பரவி வருகிறது. ஒருபுறம் செல்ஃபி மகிழ்ச்சியை தந்தாலும் மற்றொரு புறம் சோகத்தையும் தந்து விடுகிறது. கடந்த வாரம் துருக்கியில் சாலையில் செஃல்பி எடுக்கப் போய் இரு சிறுவர்கள் சாலையில் விபத்துக்குள்ளாகி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
உலகத்தில் சுறா தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்போரை விடவும் செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கை 2015ம் ஆண்டில் அதிகம் என ஒரு அதிர்ச்சிகரமான ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு வெளியான நிலையில் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட், செஃல்பி எடுப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் 2015ம் ஆண்டில் மட்டும் 27 பேர் செல்பி எடுத்துக் கொள்ளும் போது உயிரிழந்துள்ளதாகும். இந்தியாவில்தான் அதிக செல்ஃபி மரணங்கள் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
செல்ஃபி மேனியா
செல்ஃபி எடுத்து அதைச் சுடச்சுட பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்களில் போடுவது என இந்தக் கால இளைய தலைமுறையினரின் முக்கியக் கடமையாகிவிட்டது. ஒன்று எங்கு சென்றாலும், எந்த நிகழ்வாக இருந்தாலும், துக்க வீட்டில் பிணத்துடன் செல்ஃபி எடுக்கும் அளவுக்கு செல்ஃபி மேனியா இன்று வேகமாகவே பரவிவருகிறது.
செல்ஃபி மரணங்கள்
இந்தியாவில் சமீப காலமாக, செல்ஃபியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகவும், உலகிலேயே இந்தியாவில் தான் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல செய்தி நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
செல்ஃப் ஆக 27 பேர் மரணம்
இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில் சென்ற ஆண்டு மட்டும் 27 பேர் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் போது உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில், பாதி பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.
ரயில் முன் செல்ஃபி
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரயில் மீது எறி செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி மாணவன் உயிரிழந்தான்.
மதுராவிற்கு அருகில் உள்ள கொசிகலாவில் 3 கல்லூரி மாணவர்கள் ஓடும் ரயிலின் முன் செல்ஃபி எடுத்துக் கொள்ள முயற்சித்த போது பரிதாபமாக உயிரிழந்தனர்.
படகு கவிழ்ந்து மரணம்
அதேபோல், 7 இளைஞர்கள் தனது நண்பனின் பிறந்தநாளை படகில் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது செல்ஃபி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக படகு கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாஜ்மகால் முன் மரணம்
கடந்த செப்டம்பர் மாதம் தாஜ்மஹாலின் படிக்கட்டில் செல்ஃபி எடுக்க முயன்ற ஜப்பானிய மூதாட்டி தவறி விழுந்து மரணமடைந்தார்.
ஒகேனக்கல் படகு விபத்து
ஒகேனக்கல்லில் பரிசலில் பயணம் செய்த போது செல்ஃபி எடுத்தவர்கள் குடும்பத்துடன் பலியாகினர். இதுதவிர, நாமக்கல்லில் ஒரு இளைஞர் உயர்ந்த பாறையின் மீது செல்ஃபி எடுக்க முயற்சித்த போது கால் தவறி கீழே விழுந்து பலியானார்.
ஆண்டுதோறும் மரணம்
நர்மதா கால்வாயில் குதிக்கும் போது செல்ஃபி எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் ராஜ்கோட்டில் உயிரிழந்தனர். இதேபோல் இந்த ஆண்டும் பல உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
மும்பையில் தடை
இந்த மாதம் கூட மும்பையில் இருவர் செல்ஃபியால் உயிரிழந்துள்ளனர். இதனால், செல்ஃபி மோகத்தை கட்டுக்குள் கொண்டுவர மும்பை போலீஸ் 16 இடங்களை கண்டறிந்து அங்கு செல்ஃபி எடுப்பதை தடை செய்துள்ளனர்.
செல்ஃபி மோகம் என்று ஒழியும்
பிறந்த குழந்தையுடன் செல்ஃபி, இறந்த சடலத்துடன் செல்ஃபி என செல்ஃபி மோகம் கொண்டு அலைகின்றனர் மக்கள். இந்த செல்ஃபியால் செல்ஃப் ஆக உயிரையும் இழக்கின்றனர் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை.