ரூ. 250க்கு லாட்டரி டிக்கெட் வாங்கிய கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ரூ. 10 கோடி பரிசு
Recommended Video
திருச்சூர்: திருவோணம் பம்பர் லாட்டரியில் திருச்சூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ரூ. 10 கோடி பரிசு விழுந்துள்ளது.
திருவோணம் பண்டிகைக்காக கேரள அரசின் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்கப்பட்டது. லாட்டரி துறை 45 லட்சம் டிக்கெட்டுகளை அச்சிட்டது. அதில் 43.11 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 250.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த கூலித் தொழிலாளியான வல்சலா, எஸ்.எஸ். மணியன் ஏஜென்சியிடம் டிபி 128092 என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். குலுக்கலில் அவரது டிக்கெட்டுக்கு தான் ரூ. 10 கோடி பரிசு விழுந்துள்ளது. கமிஷன் பிடித்தம் போக வல்சலாவுக்கு ரூ. 6.34 கோடி கிடைக்கும்.
ஆதத் பகுதியில் வாடகை வீட்டில் தனது 2 மகன்கள், மருமகள், பேரக்குழந்தைகளுடன் வசித்து வரும் வல்சலா முதல் வேலையாக வீடு வாங்க போவதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் அவரின் வீடு இடிந்துவிட்டது. அதன் பிறகே அவர் வாடகை வீட்டிற்கு சென்றார்.
பெட்டிக் கடை நடத்தி வந்த வல்சலாவின் கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். லாட்டரியில் பரிசு கிடைத்தது குறித்து வல்சலா கூறியதாவது,
சொந்த வீடு வாங்க வேண்டும். என் மகன் வினீஷுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. புது வீட்டில் வைத்து குழந்தைக்கு பெயர் வைக்க விரும்புகிறோம். என் மகள் விது திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் விபினுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவனின் திருமணம் புது வீட்டில் தான் நடக்கும் என்றார்.