ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜல்லிக்கட்டு போட்டியை ஒழுங்குபடுத்த 5 கூடுதல் வழிமுறைகளை தமிழக அரசு சமர்ப்பித்தது.
இதைத் தொடர்ந்து வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், மாட்டை துன்புறுத்தும் வகையில் உரிமையாளர் செயல்படுகிறாரா என அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாட்டின் உரிமையாளரை காவல்துறை, விலங்குகள் நல வாரிய அதிகாரி சோதனை செய்வார் என்றும் கூறினார்.
மேலும், விலங்குகள் நலவாரியம் எழுப்பும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்தது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் வாதம் முடிவடைந்தது.