சகாயம் தலைமையிலான குழுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
டெல்லி: கிரானைட், தாது மனல் கொள்ளை பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கிரானைட் மற்றும் தாதுமணல் கொள்ளை குறித்து சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான முதன்மை பெஞ்ச், ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது.
அத்துடன் அந்த குழு 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அக்டோபர் 28-ந் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்குப் பின்னர் கிரானைட் முறைகேடு தொடர்பாக புதியதாக வழக்குகள் அடுத்தடுத்து போடப்பட்டன. இந்த நிலையில் சகாயம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கிரானைட் கொள்ளை தொடர்பாக தமிழக அரசு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த புதிய விசாரணையால் தேவையற்ற கால தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.