மிருகவதை தடுப்பு சட்ட திருத்த அவசர சட்டம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு தர வாய்ப்பில்லை?
டெல்லி: மிருகவதை தடுப்புச் சட்டத்தில் மாநில திருத்தத்துக்கு அவசர சட்டம் கொண்டுவரப்படும் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார். மாநில அரசின் அவசர சட்டத்தின் படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தை அணுகி தடை பெற வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. ஆகையால் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வாக இது அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளத்துக்கான புரட்சியில் இளைஞர்கள் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் தன்னெழுச்சியான போராட்டம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது.
இந்த நிலையில் மிருகவதை தடுப்பு சட்டத்தில் மாநில திருத்தத்துக்கு அவசரம் சட்டம் பிறப்பிக்கப்படும்; இதன் மூலம் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பும் ஜல்லிக்கட்டு புரட்சியாளர்கள் எழுப்பும் சந்தேகங்களும்...
- மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ள மிருகவதை தடுப்புச் சட்டத்தில் 3 பிரிவுகள் மிக முக்கியமானவை
- இச்சட்டத்தில் 3, 11, 22 ஆகிய பிரிவுகள்தான் மிகவும் முக்கியமானவை. இதன் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
- மிருகவதை தடுப்புச் சட்டத்தின் 22-வது பிரிவு காட்சிப்படுத்துதல், வித்தை காட்டுதலை சொல்கிறது
- 3-வது பிரிவானது விலங்குகளை யாரும் சித்திரவதை செய்யாமல் உரிமையாளர் பாதுகாக்க வேண்டும் என்கிறது.
- 11-வது பிரிவானது விலங்குகளை துரத்துதல், அதன் மீது ஏறுதல் ஆகியவற்றை தடை செய்கிறது.
- ஆக மிருகவதை தடுப்பு சட்டத்தின் முக்கியமான அனைத்து பிரிவுகளுமே சாராம்சத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு எதிரானதாகவே இருக்கிறது.
- அத்துடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அவசர சட்டத்துக்கு தடை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது.
- இருப்பினும் மிருகவதை தடுப்பு சட்டத்தில் வெட்டி உண்பது, லாடம் கட்டுதல், மூக்கணாங் கயிறு குத்துதல், கொம்பு எடுத்தல், பலி கொடுப்பது ஆகியவை வதை இல்லை என்கிறது. ஆகையால் லாடம் கட்டுதல், மூக்கணாங் கயிறு குத்துதலுடன் ஜல்லிக்கட்டையும் சேர்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
- அதுவும் இந்த திருத்தத்தை மத்திய அரசு அவசர சட்டமாக கொண்டு வந்தால்மட்டுமே சரியாக இருக்கும்; அதிகாரமே இல்லாத மாநில அரசு கொண்டு வருவதன் மூலம் நிச்சயம் செல்லாததாகிவிடும் எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
- தமிழக அரசு தற்போது என்ன மாதிரியான திருத்தம் கொண்டு வரப் போகிறது? என்பதன் அடிப்படையில்தான் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்த தெளிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.