தாய்மொழிக் கல்விக்கு தமிழக அரசு ஆக்கம் தர வேண்டும் - மதிமுக
விருதுநகர்: தமிழக அரசு ஆங்கில மொழிவழி பயிற்றுத் திட்டத்தைக் கைவிட்டு, தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்கு ஆக்கம் தர வேண்டும் என்று மதிமுக மாநாட்டில் கோரப்பட்டது.
இதுதொடர்பாக அக்கட்சியின் விருதுநகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்...
தமிழக அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், 2013-14 ஆம் ஆண்டு கல்விப் பருவத்தில் தமிழ்நாடெங்கும் ஒன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை, ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஒவ்வொரு வகுப்பிலும் தமிழ்ப் பயிற்றுமொழிப் பிரிவும் இருக்கும். ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்பும் இருக்கும். தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்பில் மாணவர் சேர்க்கை மேலும், மேலும் குறையும். இதைக் காரணம் காட்டி, தமிழ்ப் பயிற்றுமொழி வகுப்புகளை அரசு மூடிவிடும்.
இப்போது ஒன்றாம் வகுப்பு தொடங்கி +2 வரை ஆங்கிலம் கட்டாய மொழிப் பாடமாக உள்ளது. தமிழ் அவ்வாறு கட்டாய மொழிப்பாடமாக இல்லை. அது போதாதென்று, அறிவியல், சமூகவியல், கணிதம், வரலாறு, வணிகவியல் என அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலமொழி மூலமே கற்க வேண்டும் என்று அரசு திட்டம் வகுத்துச் செயற்படுகிறது.
தமிழ்நாட்டின் கல்வி முழுமையாக ஆங்கில மயமாகிவிட்டால், தமிழ்மொழியின் பயன்பாட்டுத்தேவை அற்றுப்போய், தமிழ்மொழியின் அழிவுக்கு வழிவகுக்கும்.
சொந்தச் சிந்தனையும் அறிவுத்திறனும் தாய்மொழிவழிக் கல்வி மூலம்தான் உருவாகும் என்பது உலகக் கல்வி வல்லுநர்களின் முடிவு .
எனவே, தமிழக அரசு ஆங்கில மொழிவழி பயிற்றுத் திட்டத்தைக் கைவிட்டு, தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்கு ஆக்கம் தர வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.