டாய்லட் கட்டச் சொன்னா செல்போன் வாங்குறீங்களே... இப்டி பண்றீங்களேம்மா... சந்திரபாபு வேதனை
ஹைதராபாத்: ஆந்திர மாநில கிராமங்களில் கழிவறைகளை விட செல்போன்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் சீபுருபல்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது:
நமது வீட்டை மட்டுமல்லாது ஊரையும் சுத்தமாக வைத்துக்கொள்வது நமது கடமையாகும். ஒவ்வொரு வீட்டிலும் குளியலறையுடன் கூடிய கழிவறை கட்டுவதற்காக, ஒரு வீட்டுக்கு ரூ 12,000 வழங்கப்படும். தேவைப்பட்டால் இது 15 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆத்ம கெளரவம் என்ற பெயரிலான இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்துக்கு தினமும் 1,000 வீடுகள் வீதம் 100 நாட்களுக்குள் 1 லட்சம் வீடுகளில் கழிவறைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இப்போது கிராமப்புறங்களில் செல்போன்கள் மீது உள்ள மோகம், கழிவறை கட்டிக்கொள்ள வேண்டும் என்பதில் இல்லாதது வேதனை அளிக்கிறது' என்றார்.
மேலும், வரும் ஜூன் மாதத்திற்குள்ளாக அனைத்து பள்ளிகளிலும் கழிவறைக் கட்டி முடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் கட்டாயமாக கழிவறை கட்டிக்கொள்ள வேண்டும் என உறுதி மொழியையும் சந்திரபாபு நாயுடு எடுக்க வைத்தார்.